செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

புறத்திணை

புறப்பொருள் வெண்பாமாலை ஐயனாரிதனார் என்னும் புலவர் பெருமானால் இயற்றப்பட்ட நூலாகும்.இவர் சேர மரபினர் என்பர்.தொல்காப்பியத்திற்குப் பிறகு வந்துள்ள புறப்பொருள் குறித்த குறிப்பிடத்தகுந்த நூல் இதுவாகும்.இந் நூல் பகுதிகள் இளம்பூரணர், பரிமேலழகர், அடியார்க்கு நல்லார் உள்ளிட்டவர்களால் எடுத்தாளப்பட்டுள்ளதால் இவர்களின் காலத்திற்கு முந்தியவர் ஐயனாரிதனார் ஆவார்.இவர் காலம் கி.பி.எட்டாம் நூற்றாண்டு என்பது அறிஞர்களின் துணிபாகும்.இந்த நூலுக்குச் சாமுண்டி தேவநாயகர் என்பவர் உரை வரைந்துள்ளார்.

அகத்தியரின் மாணவர்கள் பன்னிருவர் என்பதும் அப்பன்னிருவரும் யாத்த நூல் பன்னிரு படலம் என்பதும் இந்தப் பன்னிரு படலத்தின் வழிநூல் புறப்பொருள் வெண்பாமாலை என்பதும் அறிஞர் உலகம் குறிப்பிடும் செய்தியாகும்.தொல்காப்பியத்தின் புறத்திணையியலை ஒட்டிப் புறப்பொருள் வெண்பாமாலை செய்திகள் இருப்பினும் இரண்டு நூல்களுக்கும் இடையே வேறுபாடுகள் பல உண்டு.குறிப்பாகத் தொல்காப்பியம் உணர்த்தும் காஞ்சித்திணையும்,புறப்பொருள் வெண்பாமாலை உணர்த்தும் காஞ்சித்திணையும் பெயர் அளவில் ஒன்றாக இருப்பினும் பொருள் அளவில் வேறுபாடு உடையனவாகும்.

தொல்காப்பியர் புறத்திணையியலில் வெட்சி,வஞ்சி,உழிஞை,தும்பை,வாகை,காஞ்சி,பாடாண் என்று ஏழு புறத்திணைகளையும்,அகத்திணையயியலில் முல்லை,குறிஞ்சி, பாலை,மருதம், நெய்தல்,கைக்கிளை,பெருந்திணை என்று ஏழு அகத்திணைகளையும் குறிப்பிடுகின்றார். தொல்காப்பியர் அகத்திணையாகக் குறிப்பிடும் கைக்கிளை,பெருந்திணை என்பதைப் புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர் புறத்திணையாகக் குறிப்பிடுகிறார். 

மேலும்தொல்காப்பியர் குறிப்பிடும் வெட்சி,வஞ்சி,உழிஞை,தும்பை,வாகை,பாடாண் என்ற ஆறு திணைகளுடன் கரந்தை,காஞ்சி,நொச்சி, என்று மூன்று திணைகளைக் கூட்டிப் புறத்திணைகள் மொத்தம் பதினொன்று என்றும் ஐயனாரிதனார் குறிப்பிட்டுள்ளார்.

படித்து நாம் விளங்கிக்கொள்ளவும், புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர் அமைத்துள்ள முறையிலும் புறத்திணைகளைப் பின்வருமாறு வரிசையிட்டுக்கொள்ளலாம்.

1.வெட்சித் திணை( ஆநிரைகளைக் கவர்தல்)
2.கரந்தைத் திணை(வெட்சி மறவர்கள் கவர்ந்த தம் ஆநிரைகளை மீட்டல்)
3.வஞ்சித்திணை(பகைப்புலத்தின் மேல் படையெடுப்பது)
4.காஞ்சித்திணை(தம் நாட்டின் மேல் படையெடுத்து வரும் வஞ்சி வேந்தனைப் படைதிரட்டித் தடுத்து நிறுத்திப் போர் புரிவது.இதன் அடையாளமாக காஞ்சிப்பூ சூடுவர்)
5.நொச்சித்திணை(பகையரசனிடம் இருந்து மதிலைக் காப்பது)
6.உழிஞைத்திணை(பகையரசனின் காவற்காடு,அகழி கடந்து கோட்டைக்குள் நுழைவது)
7.தும்பைத்திணை(பகையரசர்கள் இருவரும் போர் புரிவது)
8.வாகைத்திணை(போரிட்ட இருவருள் ஒருவர் வெற்றி வாகை சூடுவர்)
9.பாடாண்திணை(ஓர் ஆண்மையாளனின் உயர் ஒழுகாலாறுகளைப் புகழ்வது)
10.கைக்கிளை(ஒரு தலையாக விரும்புவது )
11.பெருந்திணை(பொருந்தாத காதல்)www.elangovan.blogspot.com

திங்கள், 26 ஆகஸ்ட், 2013

விவேகானந்தர்-பொன்மொழிகள்

          விவேகானந்தரின் பொன்மொழிகள்
இந்த உலகில் அரியது எது எனக் கேட்டால் அது மானிடப்பிறவி என்று துணிந்து கூறலாம். அத்தகைய பிறவி எடுத்த நாம் இந்த உலகிற்கு நம்மால் ஆன உதவிகளைச் செய்து வாழ்தல் வேண்டும்.
இந்த உலகைத் திருத்த வல்ல உயிர்த் தூண்கள்
1.ஆசிரியர்
2. எழுத்தாளர்
3. பெற்றோர் எனத் துணிந்து கூறலாம்.
இத்தகைய சிறப்பு படைத்தவர் எவ்வாறு வாழவேண்டும் என்பதை விவேகானந்தர் தெளிவாக விளக்கியுள்ளார்.
சமூகத்தில் 
மதிக்கத்தக்க பதவி எனப் போற்றப்படுபவர்  
1.ஆசிரியர்
2.வழக்குரைஞர்
3.காவலர்
4.மருத்துவர் 
இத்தகைய பணியினை மேற்கொண்டோர் வாழ்வில் தனக்கென வாழாது பிறர்க்கென வாழும் மனப்போக்குடன் வாழ்தல் அவசியம். சமூகத்தில் நடைபெறும் சீர்கேடுகளைக் களைவதில் உறுதியாக ஈடுபடவேண்டும்.பெண்கள் தெய்வத்திற்கு ஒப்பாக மதிக்கப்படவேண்டியவர்கள். அத்தகைய பெண்கள் வீட்டில் மட்டும் விளக்கேற்றமட்டும் பயன்படவேண்டியவர்கள் அல்ல என்பதை ஆண்கள் உணர்ந்து செயலாற்ற வேண்டும். வெறும் சதைகளால் ஆன இவ்வுடம்பின் மேல் வெறும் ஆசை கொண்டு இயங்கும் ஆணினம் முற்றிலும் தன்னை மாற்றிக்கொண்டு செயல்படவேண்டும்.
இவ்வுலகம் இன்றிருக்கும் நிலையில் வெறும் ஆணினத்தால் மட்டும் பண்பாட்டினையும், உறுதியான, வலிமையான நல்உள்ளங்கள் நிறைந்த சமுதாயத்தையும் உருவாக்கிட இயலாது. 
பெண்ணினத்தினை மதிக்கும் நாடு எல்லா வளமும் பெற்றுத் திகழும் . 
இத்தகைய சிந்தனைகள் நிறைந்த விவேகானந்தரின் பொன்மொழிகள் நமது வாழ்க்கைக்கு வளம் கூட்டும்.

நியாயத்தை எடுத்துச் சொல்வதில் கோழையாக இராதீர்கள். உலக நன்மைக்காக சண்டை செய்வதில் வீரராக இருங்கள்.
* உங்களை ஏழை என்று நினைக்காதீர்கள். பணம் ஒரு சக்தியல்ல. நன்மையும் தெய்வபக்தியுமே சக்தி. 

* இந்த உலகில் தோன்றிய நீங்கள் அதற்கு அடையாளமாக ஏதேனும் விட்டுச் செல்லுங்கள். இல்லையேல் உங்களுக்கும் கற்களுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும்.

* தனியாக இருந்து கொண்டு பலருடைய பகையை தேடிக் கொள்பவன் அறிவற்ற மூடனைப் போன்றவன். 

* செல்வம் பெருகிய காலத்தில் ஒருவனுக்கு பணிவு வேண்டும். அதே சமயம், செல்வம் குறைந்து வறுமை வரும் காலத்தில் பணியாத துணிவு வேண்டும்.

* கடின உழைப்பு இல்லாமல், பெரிய காரியங்களைச் சாதிக்க முடியாது.
* பிறருக்காகச் செய்யும் சிறுமுயற்சி கூட, நமக்குள் இருக்கும் சக்தியை எழுப்பி விடும். பிறருக்காக சிறு நன்மையை மனதில் நினைத்தாலும், சிங்கத்தின் பலம் நமக்கு உண்டாகும்.
*
செல்வமும், புகழ்வாழ்வும், உலக போகமும் சில நாள்களுக்கே. எனவே ஆசையில் மூழ்கிக் கிடக்க வேண்டாம். கடமையைச் செய்து களத்தில் உயிரை விடுவது தான் நன்மை.
*
ஒருவரிடமும் பொறாமைப்படக் கூடாது. நன்மை செய்ய விரும்புவோருக்கு கை கொடுக்கத் தயாராகுங்கள். உலக உயிர்களை நேசித்து சகோதர உணர்வுடன் வாழுங்கள்.
*
ஏழைகள், பலமற்றவர்கள், நோயுற்றவர்கள் ஆகியோரிடம் சிவனைக் காண்பவனே உண்மையில் கடவுளை வழிபடும் பேறு பெற்றவன். கோயிலில் சிவனைக் கண்டு வணங்குபவனை விட, சேவை செய்பவனையே சிவன் நேசிக்கிறார்.
*
உள்ளத்தில் உறுதி, பேச்சில் இனிமை, இதழில் புன்னகையோடு எப்போதும் இருங்கள். மனத்தளர்வு தரும் விஷயங்களில் மனதைச் செலுத்துவது கூடாது.
* நம்மைப் பற்றி எண்ணாத நேரத்தில் மட்டுமே, உண்மையான வாழ்க்கையை அனுபவிக்கிறோம்.
*
துன்பப்புள்ளியாக தோன்றும் இந்த மனிதப்பிறவியே, மகான்களைப் பொறுத்தமட்டில் பயிற்சிப் பள்ளியாக அமைந்து நெறிப்படுத்துகிறது.
*
தியாகம் செய்யுங்கள். பிறரின் உள்ளத்தை வெல்லும் சக்தி தியாகத்திற்கு மட்டுமே உண்டு.
*
கோழையும், முட்டாளும் விதி என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஆனால், ஆற்றல் மிக்கவனோ "விதியை நானே வகுப்பேன்' என்று சபதம் செய்வான்.
*
முதலில் உங்களிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். பிறகு கடவுளிடம் நம்பிக்கை வையுங்கள். இதன் மூலம் எதையும் சாதிக்கும் வல்லமை பெறுவீர்கள்.
*
அன்பின் மூலமாகவே கடமை இனிதாக முடியும். சுதந்திரமான நிலையில் மட்டுமே அன்பு தன் பூரணத்தன்மையுடன் பிரகாசிக்கும்.
*
உங்களின் பலவீனத்தை எண்ணுவதால் பலன் சிறிதும் விளையாது. பலவீனத்திற்குப் பரிகாரம் பலத்தை நினைப்பது மட்டுமே.

* தொண்டாற்ற விரும்புபவர்கள் சொந்த விருப்பு வெறுப்புகளை மூட்டை கட்டி கடலில் தூக்கி எறிந்து விட்டு, கடவுளிடம் சரணாகதி அடைந்து விடவேண்டும்.
*
தற்பெருமை சிறிதும் வேண்டாம். பொறாமைப்படுவதும் கூடாது. பூமித்தாயைப் போல பொறுமையுடன் பணியாற்றுங்கள். உலகமே உங்கள் காலடியில் கிடக்கும்.
*
எந்த வேலையையும் ஒழுங்கு, அமைதியுடன் செய்ய பழகுங்கள். குறிக்கோளை நிர்ணயித்துக் கொண்டு அதைநோக்கிய பயணமாக வாழ்வை அமைத்துக் கொள்ளுங்கள்.
*
செல்வம், புகழ், சுகபோக வாழ்வு இவையெல்லாம் சில காலம் மட்டுமே. உலக ஆசையில் மூழ்கி விடாதீர்கள்.
*
முயற்சியுடன் உழைத்தால் நம்மிடம் பெருஞ்சக்தி உண்டாவதை உணரமுடியும். பிறருக்காகச் செய்யும் சிறு முயற்சி கூட, சிங்கத்தின் பலத்தை தந்து விடும்.
*
மனத்தளர்ச்சி சிறிதும் கூடாது. எப்போதும் இனிமையோடும், மனஉறுதியோடும் இருக்கப் பழகுங்கள். இது பிரார்த்தனையை விட முக்கியமானது.

* மனதிற்குள் புதைந்திருக்கும் பரிபூரணத் தன்மையை வெளிப்படுத்துவது தான் கல்வி. வெறும் புள்ளி விபரங்களை சேகரிப்பது கல்வியல்ல. மனதை ஒருமுகப்படுத்துவதே அதன் அடிப்படை லட்சியம்.
*
ஒவ்வொரு மனிதனும் கட்டளையிடவே விரும்புகிறான். கீழ்ப்படிவதற்கு யாரும் தயாராக இல்லை. முதலில் கீழ்ப்படிய கற்றுக் கொள். கட்டளையிடும் பதவி தானாக வந்து சேரும்.
*
சிரத்தையோடு செயல்படுவது தான் இப்போது நமக்கு அவசியமான ஒன்று. மனிதனுக்கு மனிதன் வேறுபடுத்திக் காட்டுவது இந்த சிரத்தை மட்டுமே.
*
மனவலிமையுடன் சிரத்தை கொண்டவர்களாக மாறுங்கள். கேலி பேசுவது, புறம் பேசுவது, வீண்பொழுது போக்கு அம்சங்களில் கவனம் செலுத்துவதை அறவே கைவிடுங்கள்.
* "
சீர்திருத்தம்' என்ற வார்த்தையைச் சொல்லத் தேவைஇல்லை. மாறாக "முன்னேறிச் செல்' என்று சொல்லுங்கள். சூழ்நிலைக்கு ஏற்ப வாழ்க்கையை அமைத்துக் கொண்டு முன்னேறுங்கள்.

* எல்லா இடங்களிலும் கடவுள் நிறைந்துஇருக்கிறார். காணும் எல்லாப் பொருள்களிலும் பரம்பொருளைக் காண முயலுங்கள்.
*
குறிக்கோளுக்குச் செலுத்தும் முக்கியத்துவத்தை அதை அடைய மேற்கொள்ளும் பாதைக்கும் செலுத்துவது அவசியம்.
*
நல்லதையே சிந்தியுங்கள். நல்லதை மட்டுமே செய்யுங்கள்.
*
கண்டன வார்த்தை எதையும் சொல்ல வேண்டாம். உதடுகளை மூடிக் கொண்டு உங்கள் இதயங்களைத் திறந்து வையுங்கள்.
*
விரிந்து கொண்டே செல்வது தான் வாழ்க்கை. மனம் குறுகிக் கொண்டு செல்வதை மரணம் என்று தான் சொல்ல வேண்டும்.
*
சில நேரங்களில் துன்பமே மனிதனுக்கு சிறந்த ஆசிரியராக அமைந்து விடுகிறது.
*
நல்ல மனிதனை உருவாக்குவதில் இன்பமும் துன்பமும் சரிசமமான இடத்தை வகிக்கின்றன.
*
மனத்தூய்மை மிக்கவர்கள் இந்த பிறவியிலேயே கடவுளைக் காணும்பேறு பெறுகிறார்கள்.

* நீங்கள் ஒவ்வொருவரும் மகத்தான பணிகளைச் செய்யப் பிறந்தவர்கள் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள்.
*
உண்மை, நேர்மை, அன்பு இந்த மூன்றும் ஒருவரிடம் இருக்குமானால் அவரைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் உலகில் யாருக்கும் கிடையாது.
*
கடினமான சொல் எதையும் சொல்ல வேண்டாம். உதடுகளை மூடிக் கொண்டு இதயங்களைத் திறந்து வையுங்கள்.
*
ஆன்மிகத்தைப் புறக்கணித்துவிட்டு, மேலைநாட்டு நாகரிகத்தின் பின்னால் சென்றால், நம் சமூகமே அழிந்து போகும். இது நூறு சத உண்மை.
*
ஆன்மிகம் என்னும் அஸ்திவாரத்தின் மீது தான் நம் நாடு என்னும் கட்டடம் எழுப்பப்பட்டுள்ளது. ஆன்மிகமே நமது பண்புகளை மேல்நோக்கி கொண்டு செல்கிறது.
*
கர்வம் தலை தூக்கி நின்றால் நம்மால் எந்தச் செயலையும் சாதிக்க முடியாது. முதலில் கீழ்ப்படியக் கற்றுக் கொள்ளுங்கள்.
*
கடவுள் எல்லா உயிரிலும் குடிகொண்டிருக்கிறார்.



சனி, 17 ஆகஸ்ட், 2013

செல்வத்துப் பயனே ஈதல்!

189. செல்வத்துப் பயனே ஈதல்!

பாடியவர்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் (56, 189, 395). இவர் மதுரைக் கணக்காயனாரின் மகன் என்பதனால் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் என்று அழைக்கப்பட்டார். இவர் கடைசங்கத்தின் தலைவராக இருந்ததாகக் கூறப்படுகிறது. இவர் தெளிந்த அறிவும் சிறந்த புலமையும் உடையவர். இவர் புறநானூற்றில் மூன்று செய்யுள்களையும் (56, 189, 395), அகநானூற்றில் 17 செய்யுள்களையும், நற்றிணையில் 7 செய்யுள்களையும், குறுந்தொகையில் 8 செய்யுள்களையும் இயற்றியவர். மற்றும் பத்துபாட்டில் முதலாவதாகிய திருமுருகாற்றூப்படையையும் ஏழாவதாகிய நெடுநல்வாடையையும் இய்ற்றியவர் இவரே என்பது குறிப்பிடத்தக்கது. இறையனார் அகப்பொருளுக்கு இவர் எழுதிய உரை மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

குறுந்தொகையில், “கொங்குதேர் வாழ்க்கை” என்று தொடங்கும் பாடலை (குறுந்தொகை - 2) சிவபெருமான் இயற்றியதாகக் கருதப்படுகிறது. அப்பாடலில் பொருள் குற்றம் இருப்பதாக நக்கீரர் கூறியதாகவும், அப்பொழுது சிவபெருமான் நெற்றிக்கண்ணைத் திறந்து தான் யார் என்பதை நக்கீரருக்குத் தெரிவித்தாகவும், நக்கீரர், “நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே” என்று சொன்னதாகவும் திருவிளையாடல் புராணத்தில் கூறப்படுகிறது. (குறுந்தொகை, புலவர் துரை இராசாராம், திருமகள் நிலையம்)

பாடலின் பின்னணி: வேந்தனாக இருந்தாலும் வேடனாக இருந்தாலும் உணவு, உடை போன்ற அடிப்படைத் தேவைகள் எல்லோருக்கும் ஒன்றுதான். தேவைகளுக்கு மீறிய செல்வம் இருந்தால் அதைப் பயன்படுத்த முடியாது. ஆகவே. தன் செல்வத்தைப் பிறருடன் பகிர்ந்துகொள்வதுதான் செல்வத்தைப் பெற்றதின் பயன். தானே தன் செல்வம் முழுவதையும் அனுபவிக்கலாம் என்று எண்ணுபவர்கள் செல்வத்தின் பயனை இழந்தவர்களாவார்கள் என்ற சிறந்த கருத்தை இப்பாடலில் நக்கீரர் கூறுகிறார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: பொருண்மொழிக் காஞ்சி . உயிர்க்கு நலம் செய்யும் உறுதிப் பொருள்களை எடுத்துக் கூறுதல்.

தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்,
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,
5 உண்பது நாழி; உடுப்பவை இரண்டே;
பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே;
செல்வத்துப் பயனே ஈதல்,
துய்ப்பேம் எனினே, தப்புந பலவே.

அருஞ்சொற்பொருள்:1. பொதுமை = பொதுத்தன்மை; வளாகம் = இடம் (வளைந்த இடம்). 3. யாமம் = நள்ளிரவு; துஞ்சல் = தூங்குதல். 4. கடு = விரைவு; மா = விலங்கு. 5. நாழி = ஒருஅளவு (ஒருபடி). 6. ஓர் - அசை. 8. துய்த்தல் = அனுபவித்தல்

உரை: தெளிந்த கடலால் சூழப்பட்ட இவ்வுலகம் மற்றவர்களுக்கும் பொதுவானது என்று எண்ணாமல், தானே ஆட்சி செய்யும் ஒருவர்க்கும், பகலும் இரவு தூங்காமல், விரைந்து ஓடும் விலங்குகளை வேட்டையாடுபவனுக்கும் உணவு ஒருபடி அளவுதான்; அவர்கள் உடுப்பது இரண்டு ஆடைகள் தான். அதுபோல், மற்ற தேவைகளிலும் இருவரும் ஒப்பானவரரே ஆவர். ஆகவே, எவ்வளவு செல்வம் இருந்தாலும் ஓரளவுக்கு மட்டுமே அதை அனுபவிக்க முடியும். அதனால், செல்வத்தினால் ஒருவன் பெறக்கூடிய பயன் அதைப் பிறர்க்கு அளித்தலேயாகும். அவ்வாறு பிறர்க்கு அளிக்காமல் தானே அனுபவிக்கலாம் என்று ஒருவன் எண்ணினால் அவன் செல்வத்தினால் வரும் பயன்கள் பலவற்றையும் இழந்தவனாவான்.

tamil-numbers

1
2
3
4
5
6
7
8
9
10
100
1000

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

கவரிமான்



                               கவரிமான்
அவள் கோவில் வாசலில் நின்றிருந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்த வயதான இரண்டு குழந்தைகளைப் பார்த்தாள். காலையில் நடந்தது அவளுக்கு ஏதோ இனம் புரியாத உணர்வை அவள் மனதில் பதிந்திருந்தது.
நாங்கள் இரண்டு பேரும் உன்னை விட்டுப் போய்ட்டா நீ என்னடா செய்வே? என அப்பா கேட்டதை ஒரு கணம் கேட்டவுடன் சடாரென எனக்கென்ன! எப்போதும் போல நீங்க இருக்கீங்க..எனக்குக் கல்லூரியில் ஆசிரியர் உங்க ரெண்டுபேர் மாதிரியே தான்...அச்சு அசலா என்ன  பழக்கங்கள் தான் கொஞ்சம் வேறுபாடா! கிட்டத்தட்ட வாளின்முத்தம் கதை மாதிரின்னு வைச்சுக்கிட்டா என்ன! ஆனா எல்லாரும் என்னை பழக்கங்களும் அதே போலத்தான்னு சொல்றாங்க! இருக்கற ஏரியா,வளர்த்த வளர்ப்பு, பாட்டு,வீணைன்னு......சொல்லிக்கொடுத்தாச்சு.இப்போ விட்டுட்டுப்போறேன்னுட்டுஆளுக்காளு பாட்டுப் பாடறாங்க..... நான் பாட்டுக்குப் போறேன் எனச் சொல்ல வாய் வந்ததைச் சடாரென நிறுத்திக் கொண்டாள் மீனாட்சி. ஓ...கல்லூரியிலும் நம்ம ஆசிரியர் நம்மை விட்டு வேறு வகுப்பிற்குச் சென்று விடுவதாகச் சொல்லியிருந்தாரே!
எதுவுமே என்னைக்குமே நிரந்தரம் இல்லை என்றாரே....நாமும் இந்தக் குழந்தை போல யாருமே இல்லாமல்  இருந்திருக்கலாமோ யாருமே இல்லாத உலகத்தில் இந்தக் குழந்தைகள் வாழவில்லையா என ஒரு கணம் யோசித்தாள். எதையும் இழக்கும்போது மனதைப் பக்குவப்படுத்தி தன்னைத் தயார் செய்து கொள்ளவேண்டிய கலையை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். உங்களை விட்டுப் பிரிந்து விடப்போகிறேன். நீங்கள் நன்றாகப் படிக்க வேண்டும் என ஆசிரியர் கூறினாரே...அப்போது வாணி கூடக் கேட்டாளே! நாங்கள் எந்தத் தவறும் செய்யாத போது எதற்காக இந்த இடமாற்றம்?
தலைமைக்குக் கட்டுப்பட வேண்டும் இல்லையா வாணி? அழகாய்ப் புன்னகைத்தார் இராதா. இழப்புகளை  ஏற்று வாழ நம்மை எப்போதுமே தயார் செய்து கொள்ள வேண்டும். அப்போ மீதமுள்ள ஆசிரியர்கள் சரியில்லையா! என வினா தோன்றுமில்லையா?
அப்போ நீங்கள் எங்களை விட்டு விலகிச் சென்றால் செய்யாத தவறுக்காக நாங்கள் உங்களை விட்டுப் பிரிவதாகத் தான் எல்லோருடைய கண்ணுக்கும்  தெரியும். அதில் எங்களுக்கு உடன்பாடு கிடையாது. இத்தனை வருடம் உங்களிடம் படித்தோம். நாங்கள் வாழ்க்கைக்குத் தேவையானதை உங்களிடம் கற்றோம். தங்களை விட்டுப் பிரிந்தால் ஒவ்வொரு முறையும் இப்படித்தான் இனியும் செய்வார்கள். நாம் இது குறித்துக் குரல் எழுப்பினால் என்ன கலா?
நீ என்ன சொன்னாலும் யாரும் கேட்கப் போவது கிடையாது. கல்லூரியை விட்டு வேண்டுமானால் நாம் விலகிக் கொள்ளலாம். அவ்வளவு தான்.நாமென்ன...மாணவர்கள் தானே..நமது உணர்வுகள் யாருக்கும் புரிவதில்லை என நிரஞ்சன் அலுத்துக் கொண்டான். இதோ! அழகாய் சொல்லப்போனால் எத்தனை நாள் உங்களுடன் இருப்போம்? அதுவரை நாங்கள் உங்களுடன் இருப்பதை மட்டுமே விரும்புகிறோம். இல்லையெனில் நாளை முதல் நாங்கள் வரவில்லை. நாங்களாக உங்களை விட்டுப்பிரிவது இயற்கை. அதை ஏற்று நாங்கள் வாழ்வோம் என் அம்மா, அப்பா கூறியதைப் போல. ஆனால் நீதியற்ற கருத்தினை ஏற்று நாங்கள் தங்களைப் பிரிவது எங்கள் படிப்பைப் பாதிக்கும். நான் கல்லூரியை விட்டுப் போவதாக உள்ளேன்.
நிரஞ்சன் சொன்னது ஒருபுறம் வேதனை.  காலையில் வீட்டிலிருந்து வயதான பெற்றோரிடம் சொல்லாமல் வந்த வேதனை மனதில் ஒருபுறம்..கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒருபுறம் என மனதைப் பந்தாட ஒரு ஓரமாக அமர்ந்து அந்தக் குழந்தைகள் செய்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.கையை ஒரு கணம் திருப்பிப் பார்த்துக்கொண்டாள்.ஏற்கனவே பிளான் செய்தது போல் நிறைவேற்ற இன்னமும் சில வேலைகள் இருக்கிறதே! இப்போது இந்தப் பிரச்னை வேறு..யாருக்காக இருக்க வேண்டும்? என இரண்டு வருடமாகவே பலமுறை யோசித்து எடுத்த முடிவை நிறைவேற்றிக் கொள்ள இந்தப் பாச உணர்வு தடை போடுகிறது. நம்பெயர் பூமியில் நிற்கும்படி ஏதோ ஆசிரியர் சொன்னார் என ஏதோ கிறுக்கி எழுதி அவர் கையால் கையெழுத்து வாங்கி முடித்து விட்டோம். பூமிக்கு வந்த வேலை முடிந்து விட்டது என மனதில் நினைத்துக் கொண்டாள். அருகில் இருந்த அந்தப் புத்தகத்தின் அட்டைப்படச் சுவடி அவள் கிழித்த அவள் அப்பாவின் சுவடியைப்போல அவளைப் பார்த்துச் சிரித்தது. அப்பாவைப் போல மனதெல்லாம்  வெள்ளையாய்ச் சிரிக்க ஏன் இந்த இரண்டு வருடமாக என்னால் முடியவில்லை?  ஏதோ ஆசிரியர் இருக்கிறார் என வாழ்ந்தோம்.இப்போது அதற்கும் ஒரு தடை.மனதில் மத்தாப்பூவாய் பல எண்ணங்கள் வந்து மாற ......கைப்பையில் இருப்பது நல்ல வேளை யாரும் இன்னமும் பார்க்கவில்லை என நினைத்துக் கொண்டாள். இன்னமும் 3 மாதம்தான் என மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.  யாரோ மொபைலில் படம் பார்த்துக் கொண்டிருந்ததை அவள் பார்த்தாள். ஆட்டோவில் நாலைந்து பேர் கலர்கலராய்க் கட்டிய கொடிகளுடன் உள்ளே உருட்டுக் கட்டைகளுடன் முன்னால் சென்ற டூவீலரை விரட்டியதைப் பார்த்தாள். ஏனிந்த வன்முறை! என்று ஒழியும் இந்தக் கலாசாரம் படங்களில் என தனக்குத் தானே கேட்டுக் கொண்டாள். டூவீலர் அடையாறு தாண்டி உள்ளே தரமணிக்குச் சென்றவுடன் பின்னால் வந்த ஆட்டோ காணாமல் மறைந்தது.என்னமாய்ப் படம் எடுக்கிறார்கள் என மொபைல் வைத்திருந்த பெண் இரசித்தாள். நீங்கள் எந்த காலேஜ் என்றாள்.
நான் காந்தி காலேஜ். நீங்க கேஆர்ன்னு நினைக்கறேன்.எப்பிடி இவ்வளவு கரெக்டா சொல்றீங்க....அது உங்க ஸ்டைல் சொல்லுது.
படம் பாக்க நான் டிஸ்டர்பா..பாக்கலாமா உங்களுடன்!
ஓகே!
இதென்ன! படத்திற்குச் சம்மந்தமே இல்லாமல் புலி படம் காட்டுறாங்க! நீங்க வேற! தேசியச் சின்னமுல்ல. அதான் வீரம்னு சிம்பாலிக்காச் சொல்றாங்கலாம். இப்பல்லாம் குறிப்பால் உணர்த்துதல்னு இலக்கணத்துல படிச்சிருக்கோம்ல. அதான் நடைமுறையில ஓடுது...பார்..பார்...
டிரெயின் கம்பார்ட்மெண்டை என்னமா காட்டுறான்னு.....சுத்தி ஆளுங்க..நடுவுல ஃபுல்லா பாரு யாருன்னு...என்ன தத்ரூபமா இருக்குல்ல....ஆமா..ஆமா...சாகப்போறவுங்களக்கூட என்ன தத்துவம் பேச வைச்சு எடுத்திருக்காங்க பார்...அந்த காலத்து அந்தி நேரத் தென்றல்காற்று..படம் பாக்குற மாதிரி இருக்கு.....போதும் தேங்க்ஸ்..பொழுது நல்லா போச்சு.....பழைய கசங்கிப்போய் பஃப்ஸ் மடித்த பேப்பரைத் திருப்பிப் பார்த்தாள். அது 2011 இல்  வெளியான மார்ச் மாத பேப்பர் கார்ட்டூன்.பின்னால்   திருப்பித் திருப்பிப் திருப்தியாக பெண்ணைத் துன்புறுத்தும் எவரும் ஜெயித்ததாக வரலாறு இல்லை என்ற செய்தியைப் படித்து முடித்தாள். திரும்பவும் மீனாட்சி அந்தப் பையனைப் பார்த்தாள்.
அந்தப் பையன் வாடி வதங்கிய பூவை அந்தப் பெண் தலையிலிருந்து எடுத்துக் கீழே போட்டான். ஆதித்யா அண்ணா! அது போலவே எனக்குத் தலை வாரி விடுகிறாயா?என யாரையோ சுட்டிக் காட்டினாள். சுட்டிக் காட்டிய இடத்தில் ஒரு பெண் தலைவிரி கோலமாகத் தலையை விரித்துப் போட்டு அடியில் ரப்பர் பேண்ட் போட்டிருந்தாள். ப்பூ...அதுதானா ....பிரமாதம். இதோ பார் எந்தங்கைக்கு இல்லாத அலங்காரமா? என்றான்.
 அருகில் இருந்த பெரிய கைப்பையைப் பார்த்து வியந்தாள் மீனாட்சி. அது பணக்காரர்கள் வைத்திருக்கும் ஆடம்பரப்பை. அது நிறைய என்ன இருக்கும் என்ற ஆவலில் உள்ளே எட்டிப்பார்த்தாள். அதில் உள்ளே பெரிய ஃபோட்டோ.அதில் நகை அணிந்த கோல்த்தில் ஆணும், பெண்ணும் நின்றிருந்தனர்.
பக்கத்தில் போய் வேகமாக உடனே இது யார் எனக் கேட்டாள். இது எங்களை வளர்த்தவங்க. எங்களுக்கு அப்பா, அம்மா யாரும் கிடையாது. அனாதை ஆஸ்ரமத்துல வளர்ந்தோம். அங்கே இவங்க திடீரென இறந்து போய்ட்டாங்க. எனக்கு அங்கு இருக்கப் பிடிக்கல..வந்து கோவில்ல இதோ உட்காந்துட்டோம்.
இதென்ன! நம்மைப்போலவே இந்தக் குழந்தைகளும் ...என ஆச்சரியத்தில் வியந்தாள் மீனாட்சி. ஏம்மா! அங்கு வேறு யாரும் இல்லையா? உங்க படிப்பு இதால தடைபடுமே!
போகட்டுமே! பூமியில எதுவுமே நிரந்தரம் கிடையாது. படிப்பில்லாட்டி என்ன? நான் இதோ கோவில் வாசல்ல உட்காந்துட்டேன் அழகா சாப்பாடு கிடைக்குது. இதோ! அவுங்க எடுத்துக் கொடுத்த துணி ஆயுசுக்கும் போதும்.மனசுக்குப் பிடிச்சாத் தான் எதுவும்...
..
மீனாட்சி படிப்பைத் தொடர்ந்தாளா?
கதையைத் தொடர்ந்து எழுதுக. கதைக்குத் தலைப்பு பொருத்தமானதா! ஆராய்க.