சனி, 1 செப்டம்பர், 2012

கற்பித்தல்: வாய்ப்புகளும் சிக்கல்களும்

4.0   இணைய வழிக் கற்றல் கற்பித்தலின் மேன்மைகள்
இணையம் வழியாகத் தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தல் நடைபெறுவதால் குறிப்பிடத்தக்க நன்மைகள் விளைகின்றன. அவற்றைப் பின்வருமாறு பட்டியலிடலாம்:-
1)  மாணவர்கள் பாடங்களை எளிதாகப் புரிந்துகொள்ள முடிகிறது.
2)  ஒன்றைப் பற்றிய மேலதிக தகவலை அறிந்துகொள்ளும் வகையில்
    தொடுப்புகளைக் (hypelinks) கொண்டிருக்கிறது.
3) வெவ்வேறு ஆற்றலும் விருப்பமும் கொண்ட மாணவர்கள் தாங்கள் விரும்பும்
   வகையில்  கற்பதற்கு வாய்ப்பினை வழங்கிகின்றது.
4)  எழுத்து (text), ஒலி (sound), காட்சி (visual), அசைவுப்படம் (graphics),
   நிகழ்ப்படம் (video), உடலியக்கம் (psychomotor), இருவழித் தொடர்பு (interactive)
   எனப் பலதரப்பட்ட வகையில் கற்பதற்குரிய சூழல் இருக்கின்றது.
5)  மாணவர்களின் கற்றல் திறனையும் தன்னம்பிக்கையையும் வளர்க்கிறது.
6)  தனியாகக் கற்பதற்குரிய (individualise learning) வாய்ப்பு கிடைக்கிறது.
7) மாணவரை இலக்காகக் கொண்ட கற்றல் கற்பித்தல் சிறப்பாக நடைபெறுகிறது.
8) மனமகிழ்ச்சியுடன் கற்பதோடு வெல்விளி(சவால்) நிறைந்த கற்றல் சூழலை
   உருவாக்கிக் கொடுகின்றது.
9) மாணவர்களின் ஆக்கச் சிந்தனையையும் ஆய்வுச் சிந்தனையையும்
   வளர்த்துகொள்ள உதவுகிறது.
10) குறிப்பிட்ட காலம், இடம், சூழல் என எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல்
    கற்பதற்குரிய வாய்ப்பு கிடைக்கிறது.
11) கிடைப்பதற்கு அரிய தகவல்களை விரைவாகவும் விரிவாகவும் பெற முடிகின்றது.
12)  குறைந்த செலவில் விலைமதிப்பில்லாத் தகவல்களையும் தரவுகளையும்
    நொடிப்பொழுதில் மிக எளிதாகப் பெற முடிகிறது. 
13) கற்றலில் ஏற்படும் சிக்கல்களுக்குரிய தீர்வுகளைப் பல முனைகளிலிருந்தும்
   மூலங்களிலிருந்தும் உடனடியாகப் பெற முடிகிறது.
14) உலகத்தின் எந்தப் பகுதியில் இருந்தாலும் ஒருவரோடு ஒருவர் தொடர்பு
    கொள்ளவும், இணைய உரையாடல் கருத்துப் பரிமாற்றம் செய்யவும், நிகழ்ப்பட
    கலந்துரையாடல் நடத்தவும், மின்னஞ்சல் வழி தகவல்களைப் பரிமாறவும்
    வாய்ப்புகள் திறந்து கிடக்கின்றன.
15) தகவல்களைத் திரட்டவும், சேமிக்கவும், புதிய தகவல்களை இற்றைப்படுத்தவும்
    (update), தேவையற்ற விவரங்களை நீக்கவும், விரும்பியபடி மாற்றங்களைச்
    செய்துகொள்ளவும் முடிகிறது. 
5.0   முடிவுரை
மொழிக் கற்றல் கற்பித்தல் எளிமையான ஒன்றல்ல. அதுவும் இணையத்தில் தமிழ்மொழியைக் கற்பதும் கற்பிப்பதும் மிகக் கடுமையான ஒன்றாகும். இருந்தபோதிலும், ஒலியியல், எழுத்தியல், வரிவடிவம், இலக்கணம், இலக்கியம் என விரிந்து கிடக்கும் தமிழ்மொழியை இணையத்தின் துணைகொண்டு கற்கவும் கற்பிக்கவும் கூடிய வாய்ப்புகள் இன்று நடைமுறைக்கு வந்திருக்கின்றன. தற்போதைய சூழலில் இருக்கின்ற வாய்ப்புகளையும் ஏந்துகளையும் முழுமையாகப் பயன்படுத்தி தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலை முன்னெடுக்கும் முயற்சிகள் நடைபெற வேண்டும். மரபு வழியான கற்றல் கற்பித்தலுக்கு இடையில் இணையம் சார்ந்த நவின முறையிலான கற்றல் கற்பித்தலுக்கும் இடங்கொடுக்க வேண்டும். இணையம் வழி கற்பித்தலானாலும் சரி அல்லது இணையத்தளங்களைப் பயன்படுத்தி கற்பதானாலும் சரி, இவ்விரண்டினையும் விரிவுபடுத்தி வளர்த்தெடுக்கும் வழிகளை ஆராய வேண்டும்.
தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலைப் புதிய இலக்கு நோக்கி நகர்த்த வேண்டிய பொறுப்பும் கடமையும் கல்வியாளர்களுக்கும் கணிஞர்களுக்கும் இருக்கின்றது. ஆகவே, உலக உருண்டையில் தமிழும் தமிழ்க் கல்வியும் நிலைபெற வேண்டுமானால், இணையம் வழியாகவும் இணைய ஏந்துகளின் வழியாகவும் தமிழைக் கற்கவும் கற்பிக்கவும் வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இதனை உணர்ந்து, தமிழ்மொழியைக் கற்பிக்கும் ஆசிரியர்களும் தமிழைக் கற்கும் அல்லது கற்க விரும்பும் மாணவர்களும் இனையத்தையும் இணைய ஏந்துகளையும் பயன்படுத்த முன்வர வேண்டும்.
இனிவரும் காலம் இணையத்தோடு இரண்டறக் கலந்துவிடப்போகின்றது. அதற்கேற்றால்போல, தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலும் இணையத்தை உள்வாங்கிக்கொள்ள வேண்டும். அப்பொழுதான், தமிழும் தமிழ்க்கல்வியும் நீடுநிலவ முடியும்; தமிழ்மொழி தனது தொன்மையின் தொடர்ச்சியைத் தொலைத்துவிடாமல் நிலைத்து வாழும்.  

மேற்கோள்கள்
குழந்தைவேல் பன்னீர்செல்வம்.சு. (2009). இணையம்வழி மொழிக் கற்றல் கற்பித்தலில்
புதிய அணுகுமுறைகள், தமிழ் இணைய மாநட்டு மலர், செருமானியம்.
ரபி சிங். எம்.ஜே. (2010). மின்னனு வழியில் தமிழ்மொழி கற்பித்தல் மற்றும் கற்றல்,
தமிழ் இணைய மாநாட்டு மலர், கோவை
நக்கீரன்.பி.ஆர். (2010). தமிழ் இணையப் பல்கலைக்கழக மென்பொருள்கள் – ஒரு
கண்ணோட்டம். தமிழ் இணைய மாநாட்டு மலர், கோவை
இளஞ்செழியன்.வே & இளந்தமிழ்.சி.ம. (2011). தமிழில் தகவல் தொழில்நுட்பத்தைக்
கற்பித்தல்: வாய்ப்புகளும் சிக்கல்களும். தமிழ் இணைய மாநாட்டு மலர்,
பென்சில்வேனியா.
பெரியண்ணன்.கோ. (2011). இணையம் மற்றும் கணினி வழி தமிழ் கற்றல் கற்பித்தல்.
தமிழ் இணைய மாநாட்டு மலர், பென்சில்வேனியா.
Dr. Seetha Lakshmi. (2011). Facebook and Tamil Language in Singapore's Teacher
Education . தமிழ் இணைய மாநாட்டு மலர், பென்சில்வேனியா.
Dr.Sajap Maswan. (1998). Kelebihan Penggunaan Internet dan Laman Web dalam
Pengajaran dan Pembelajaran. Institut Perguruan Tuanku Bainun. Pulau
Pinang, Malaysia.
Collins,B. (1996). The Internet As An Educational Innovation: Lesson From
Experience With Computer Implementation. Educational Technology, 36 (6),
pg. 21- 30

தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலில் இணைய ஏந்துகளின் பயன்பாடு

3.0   தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலில் இணைய ஏந்துகளின் பயன்பாடு
      தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலுக்கு உதவும் இணைய ஏந்துகள் தற்போது பல்கிப் பெருகி வருகின்றன. மழலையர் கல்வி தொடங்கி முனைவர் படிப்பு வரையில் தமிழில் படிப்பதற்குரிய வாய்ப்புகளை இன்றைய இணைய உலகம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. கேட்டல், பேச்சு, வாசிப்பு, எழுத்து முதலான அடிப்படைப் படிப்பு முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரையில் இணையத்தில் படிக்கக்கூடிய நிலைமை உருவாகிக்கொண்டு வருகின்றது. இலக்கணத்தையும் இலக்கியத்தையும் புதிய ஊடகத்தின் வழியாக புதிய அணுகுமுறைகளோடு கற்பதற்கும் கற்பிப்பதற்கும் வாய்ப்புகள் பெருகி வருகின்றன. அவ்வகையில், தமிழ்க் கற்றல் கற்பித்தலுக்குப் பங்களிக்கும் இணைய ஏந்துகள் குறித்து கண்னோட்டமிடுவோம்.
3.1   தமிழ்க்கல்வி வலைத்தளங்கள்
      தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலுக்குப் பயன்படும் பல இணையத்தளங்கள் உள்ளன. தமிழை முதல்மொழியாகக் கற்பதற்கும், இரண்டாம் மொழியாகக் கற்பதற்கும் இணையத்தளங்கள் வந்துவிட்டன. அதுமட்டுமல்லாது, ஆங்கிலத்தின் வழியாகத் தமிழ் கற்றல், மலாய்மொழி வழியாகத் தமிழ் கற்றல் என உலகத்தின் பெருமொழிகள் பலவற்றின் வழியாகத் தமிழைப் படிப்பதற்குரிய சூழல்கள் உருவாகியுள்ளன. முறையாகச் செய்யப்பட்ட கலைத்திட்டங்கள், பாடங்கள் ஆகியவற்றை இணையத்திலேயே படிப்பதன் வழியாகத் தமிழ்மொழியைக் கற்றுக்கொள்ள முடியும்.
தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தமிழ்மொழிக் கற்றலுக்கு மிகச்சிறந்த முன்னோடியாகத் திகழ்வதை மறுக்க இயலாது. அதுபோல, உலகின் பல நாடுகளில் செயல்படும் தமிழ்க் கல்விக் கழகங்கள் அல்லது கல்விக் கழகத் தமிழ் இருக்கைகள் இணையம் மூலமாகத் தமிழ்க்கல்வியை முன்னெடுத்து வருகின்றன. அவ்வாறான வலைத்தளங்கள் சில பின்வருமாறு:-
அ) www.tamil.net
ஆ)www.tamil.org
எ) www.tamilvu.org


3.2   இணையத்தில் கலைத்திட்டம் - பாடநூல்
      தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் முதலான நாடுகளில் அரசாங்கத்தின் பார்வையில் தமிழ்மொழிக் கல்வி முறையாகப் பயிற்றுவிக்கப்படுகிறது. அதற்காக, தனியான கலைத்திட்டமும் பாடநூல்களும் பயன்படுத்தப்படுகின்றன. கனடா, அசுத்திரேலியா, அமெரிக்கா முதலிய இன்னும் பிற நாடுகளில் தமிழ்மொழிக் கல்வி தனியார் நிறுவனங்கள் வழியாகவும் தன்னார்வ அடிப்படையிலும் கற்பிக்கப்படுகின்றது. மேற்சொன்ன அவ்வந்த நாடுகளில் பயன்படும் கலைத்திட்டமும் பாடநூல்களும் இணையத்தில் ஏற்றப்பட்டு பகிர்ந்துகொள்ளப்படுகின்றன. இந்தப் பகிர்தலின் வழியாக, தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலில் அறிவார்ந்த பரிமாற்றங்களும் புதிய வளர்ச்சிகளும் ஏற்பட வாய்ப்புகள் நிரம்ப உள்ளன.
அ) http://www.moe.gov.my/bpk


3.3   வலைத்தளங்கள் - வலைப்பதிவுகள்    
தமிழ் வலைத்தளங்கள் இன்று ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. இவற்றுள் மிகப் பெரும்பான்மையானவை கேளிக்கை, பொழுதுபோக்கு, மனமகிழ்ச்சி, வணிகம் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டவை என்பதை மறுக்க முடியாது. ஆயினும், தமிழ்க் கல்வியை வளர்த்தெடுக்கும் நோக்கத்தோடு செயல்படும் வலைத்தளங்களும் வலைப்பதிவுகளும் ஏராளமாகவே இருக்கின்றன. இவை கற்றல் கற்பித்தலுக்கு உதவக்கூடிய கற்றல் மூலங்களை (learning source) வழங்குகின்றன. அதுமட்டுமல்லாது, கற்றல் கற்பித்தல் தொடர்பான வலைத்தளங்களையும் வலைப்பதிவுகளையும் உருவாக்கி நிருவகிக்கவும் இவை பெரும் வாய்ப்பினை வழங்கிக்கொண்டிருக்கின்றன.
அ) www.tamilheritage.org
ஆ) www.tamil.net/projectmadhurai
இ) http://hongkongtamil.blogspot.com


3.4   கலைக்களஞ்சியம் - மின்னகராதி
ஆங்கிலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள கலைக்களஞ்சியம், மின்னகராதி போன்றவை தற்போது தமிழிலேயே இணையத்தில் கிடைக்கின்றன. இவற்றின் வழியாக, ஆசிரியர்களும் மாணவர்களும் தங்கள் கற்பித்தலையும் கற்றலையும் பொருளுள்ளதாகவும் பயனுள்ளதாகவும் ஆக்கிக்கொள்ள முடியும். அதிகம் விலைகொடுத்து பெரிய பெரிய கலைக்களஞ்சியம், அகரமுதலி ஆகியவற்றை வாங்கிச் சேர்த்துவைக்க வேண்டிய வேலையோ அல்லது எங்கு சென்றாலும் அவற்றைச் சுமந்துசெல்ல வேண்டிய அவசியமோ இல்லை. இருக்கும் இடத்திலேயே விரல்நுனியில் விவரங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பினை இணையம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
அ) http://ta.wikipedia.org/தமிழ்


3.5             மின்னூலகம்
தற்போது தமிழ் மின்னூலகங்கள் இணையத்தில் நிறைய வந்துவிட்டன. இவற்றின் வழியாக ஆயிரக்கணக்கிலான நூல்கள் காணக்கிடைக்கின்றன. பழைய புதிய நூல்களோடு கிடைத்தற்கரிய தமிழ் நூல்களை மின்வடிவில், மின்நூலாகப் படிப்பதற்குரிய வாய்ப்பினை இந்த மின்னூலகங்கள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளன. அதுமட்டுமல்லாது, பழங்கால ஓலைச்சுவடிகளையும் இணையத்தில் படிப்பதற்குரிய வாய்ப்புகள் இன்று சாத்தியமாகியுள்ளன.
அ) http://tamilelibrary.org/
ஆ) http://www.chennailibrary.com/index.html
இ) http://www.tamilvu.org/library/libcontnt.htm
3.6   தமிழ் ஒருங்குறி
      தற்போது நடப்பில் இருக்கும் தமிழ் ஒருங்குறி எழுத்துரு முறை தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றுகின்றது என்றால் பொய்யில்லை. தேடு பொறிகளில் (search engine) தமிழிலேயே தட்டச்சி தேடுகின்ற நிலைமை இன்று சாத்தியமாகியுள்ளது. இதனைத் தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலிக்கு ஆக்கமான முறையில் பயன்படுத்த முடியும். குறிப்பிட்ட ஒன்றைப் பற்றிய விவரங்களைத் தமிழிலேயே தேடிப்பெறவும் தமிழிலேயே தொடர்புகளை மேற்கொள்ளவும் முடிகின்றது.
அ) http://www.google.com/webhp?hl=ta
ஆ) http://ezilnila.com/nila/unicode_writer.htm
3.7   அச்சு வடிவத்தை ஒலி வடிவமாக மாற்றுதல்
      இணையத்தில் தமிழ்மொழியில் நிகழ்ந்துள்ள புதிய வளர்ச்சிகளாக சிலவற்றைக் குறிப்பிடலாம். முதலாவது, வரிவடிவத்தை ஒலியாக்குதல் (Text to Speech). இரண்டாவது, பேச்சொலியை வரிவடிவமாக மாற்றுதல் (Speech to Text). மூன்றாவது, பிறமொழிகளைத் தமிழுக்கும் தமிழைப் பிறமொழிகளுக்கும் தானியங்கி முறையில் மொழிபெயர்த்தல் (Translation). இவ்வாறான, புதிய வளர்ச்சிகளைத் தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலுக்குப் பயன்படுத்திக்கொள்ள வழிவகைகளைக் காண வேண்டும்.
ஆ)http://www.google.com/transliterate/Tamil


3.8   சமூக வலைத்தளங்கள்
      மின்னஞ்சல், மடற்குழு போன்றவை வழியாகவும் முகநூல், டுவீட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் வழியாகவும் கற்றல் கற்பித்தல் தொடர்பான செய்திகள், பாடக்குறிப்புகள், பாடப்பொருள்கள், படங்கள், அசைவுப்படங்கள், நிகழ்ப்படங்கள் ஆகியவற்றை ஆசிரியர்களும் மாணவர்களும் பரிமாறிக்கொள்ள முடியும். இதற்கு அதிகப்படியான நேரமோ அல்லது பணமோ தேவையில்லை. குறைவான நேரத்தில் மிகக் குறைந்த செலவில் மிகப்பெரிய பலன்களை அடைய முடியும். அதுமட்டுமல்லாது, உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் எந்த நேரமாக இருந்தாலும் இணையத்தின் வாயிலாகக் கற்றல் கற்பித்தலை மேற்கொள்ளும் வாய்ப்பும் இருக்கின்றது.
இ) http://mail .yahoo.com


3.9   இணையம் ஒரு பல்லூடகம்
      இணையம் இன்று ஒரு பல்லூடகக் கருவியாக பரிணமித்து இருக்கின்றது. எழுத்துரு, படங்கள், அசைவுப்படங்கள், நிகழ்ப்படங்கள், ஒலி ஒளி சேர்க்கைகள், இணைய உரையாடல், நிகழ்ப்படக் கருத்தரங்கு, வானொலி, தொலைக்காட்சி எனப் பன்முகப் பயன்பாடுகளைக் கொண்டதாக விளங்குகின்றது. இவை அனைத்தும் தற்கால நவின முறையிலான கற்றல் கற்பித்தலுக்கு மிகவும் ஏற்றவை மட்டுமல்ல, எளிமையாகப் பயன்படுத்தக்கூடியவை. இவ்வாறு பல்லூடகமாகச் செயல்படும் இணையத்தில் உள்ளவற்றை கணினியில் சேமித்து வைத்தோ அல்லது பதிவிறக்கம் செய்தோ தேவையான நேரத்தில் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பாக இருக்கின்றது. அதேபோல், நம்மிடம் உள்ளவற்றை இணையத்தில் பதிவேற்றம் செய்து உலகம் முழுவதும் உள்ள கணினிப் பயனாளர்களோடு பகிர்ந்துகொள்ளவும் முடிகிறது. இப்படியான, அரிய வாய்ப்பினைத் தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலுக்கும் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது நம்முடைய ஆற்றலும் திறமும் ஆகும்.
ஆ)  www.tamilradios.com
இ) http://www.4shared.com
ஊ)http://www.skype.com

இணையம் வழிக் கற்றல்

2.0   இணையம் வழிக் கற்றல்

இணையம் வழிக் கற்றல் (e-learning) இரண்டு வகையில் செயல்படுகின்றது. ஒன்று இணையம் வழி கற்பித்தல் (web based instruction, WBI). மற்றொன்று, கல்வி வலைத்தளங்கள் வழி கற்றல் (educational web sites, EWS). இவ்விரண்டும் ஆங்கிலத்தில் மட்டுமே செயற்பட முடியும் என்ற நிலைமை மாறி, இன்று தமிழிலும் மிக இலகுவாகச் செயல்படுத்த முடிகின்றது.
இணையம் வழி கற்பித்தலில் (WBI), இணையம் ஒரு பயிற்றுத்துணைப் பொருளாக அல்லது கற்றல் ஊடகமாகப் பயன்படுகின்றது. அதாவது, ஆசிரியர் மாணவருக்குக் கற்பிக்க இணையத்தை ஓர் ஊடகமாகப் பயன்படுத்திக்கொள்வதாகும். இதன்வழி ஆசிரியர் மாணவருக்கு அல்லது ஒரு மாணவர் இன்னொரு மாணவருக்கு இணையம் வழியாக ஒன்றைப் பயிற்றுவிக்கவும், வழிகாட்டவும், தகவல்களைப் பரிமாறிக்கொள்ளவும் முடிகின்றது. இதற்கு, மின்னஞ்சல் (email), இணைய உரையாடல் (chat), நிகழ்ப்பட கருத்தரங்கு (video conference), மடற்குழு (news group), கோப்பு பரிமாற்று நெறிமுறை (File Transfer Protocol, FTP), சமூக வலைத்தளம் (social network) முதலான இணைய ஏந்துகள் மிகவும் உறுதுணையாக உள்ளன. மேலும் ஆயிரக்கணக்கிலான தமிழ் வலைத்தளங்களும் வலைப்பதிவுகளும் கற்பித்தலுக்கு உதவக்கூடிய தரவுகள், செய்திகள், தகவல்கள், கட்டுரைகள், கதைகள், கவிதைகள் எனப் பல்வேறு வகையான கற்றல் கற்பித்தல் மூலங்களை (Teaching and Learning Source) வழங்குகின்றன.
 
அடுத்து, கல்வி வலைத்தளங்கள் வழி கற்றல் (EWS) அணுகுமுறையைப் பற்றி கண்ணோட்டமிடுவோம். கல்வி (education) தொடர்பான இணையத்தளங்களைப் பயன்படுத்தி கற்றுக்கொள்வதே இந்த அணுகுமுறையாகும். இவ்வகையிலான இணையத்தளங்கள் தற்போது தமிழில் அதிகமாகச் செயல்படுகின்றன.  அரசுகள், பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் முதலியவை தமிழ்க்கல்வி தொடர்பான இணையத்தளங்களை நடத்திவருகின்றன. தமிழில் செயல்படும் மின்நூலகம், மின்நூல்கள், கலைக்களஞ்சியங்கள், மின்னகராதிகள் ஆகியனவும் இவ்வகையான கற்றலுக்கு மிகவும் உறுதுணையாக உள்ளன.
ஆகவே, ஆசிரியர்களும் மாணவர்களும் இணையத்தைப் பயன்படுத்தி கற்றல் கற்பித்தலை மேற்கொள்ளும் வழிவகைகளை அறிந்து, அமுல்படுத்திச் சிறந்த பலன்களை அடைய வேண்டும்.

தமிழ்மொழிக் கற்றல் -http://thirutamil.blogspot.in/2011/10/1.html

இந்தக் கட்டுரையானது, தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலுக்கு இணையத்தை எவ்வாறு பயன்கொள்ள முடியும் என்பதையும்; இணையம் தொடர்பான ஏந்துகளைத் (வசதிகள்) தமிழ்மொழி கற்றல் கற்பித்தலுக்கு எவ்வாறெல்லாம் பயன்படுத்த முடியும் என்பதையும் ஆராய்கின்றது. மற்ற எல்லாத் துறைகளையும் போலவே, இணையம் கற்றல் கற்பித்தலிலும் மிகப்பெரிய உருமாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. மரபு வழிசார்ந்த கற்றல் கற்பித்தல் அணுகுமுறைகள் குடியிருந்த வகுப்பறைகளில், தற்போது நவினமான அணுகுமுறைகள் இடம்பிடித்துள்ளன. இணையம் வழியான கல்வி முறை ஆசிரியர்களின் கற்பித்தலிலும் மாணவர்களின் கற்றலிலும் புதிய வகைப் பரிணாமங்களை உண்டாக்கிக் கொடுத்திருக்கின்றன. எளிமை, விரைவு, விரிவு, விளைபயன், ஈர்ப்பு, மனமகிழ்வு, பல்லூடகம் முதலான தன்மைகளைக் கொண்டிருப்பதால், இணையம் வழியான கல்வி முறை இன்றையக் காலத்திற்கு மிகவும் ஏற்றதாகவும் தவிர்க்க இயலாத ஒன்றாகவும் ஆகிவிட்டது. தவிர, கற்றல் கற்பித்தலுக்கு உதவும் வகையில் பலவகையான இணைய ஏந்துகள் (வசதிகள்), செயலிகள், மென்பொருள்கள், வலைத்தளங்கள் முதலியவை நிறைய வந்துவிட்டன. இணையத்தைப் பயன்படுத்தி தமிழ்மொழியைக் கற்கவும் கற்பிக்கவும்கூடிய வழிவகைகள் அறிந்து செயல்படுத்த வேண்டும். மொத்தத்தில், தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலில் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தையும் இணைய ஏந்துகளையும் முறைப்படுத்தித் திட்டமிட்டுச் சரியாகப் பயன்படுத்தினால் நன்மை விளையும் என்பதில் ஐயமில்லை.


1.0   முன்னுரை
தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் மிக விரைவான வளர்ச்சி கல்வித் துறையிலும் மிகப் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கணினியையும் இணையத்தையும் பயன்படுத்தாத கல்வி நிறுவனங்களே இல்லை என்கின்ற அளவுக்குத் தொடக்கப் பள்ளி தொடங்கி உயர்க்கல்விக் கழகங்கள் வரையில் எல்லா இடங்களிலும் இதன் ஆதிக்கம் பெருகி வருகின்றது. இத்தகையச் சூழலில், கற்றல் கற்பித்தலில் இணையமும், இணைய ஏந்துகளும் முக்கிய இடத்தைப் பிடித்துவிட்டன எனலாம். கோலின்சு (1996) என்பார் கூற்றின்படி, 1996 / 1997ஆம் ஆண்டுகளிலேயே கற்றல் கற்பித்தலில் இணையம் ஊடுருவி வளர்ந்துவிட்டது என்கிறார்.
இதன் அடிப்படையில், இணையம் வழியான கற்றல் கற்பித்தல் முறைமை இன்று மிகவும் புகழ்பெற்றதாகவும் எல்லாராலும் விரும்பப்படுவதாகவும் இருக்கின்றது. ஆகவேதான், இணையத்தைப் பயன்படுத்தி கற்றல் கற்பித்தலை வழிநடத்துவதற்கு உலகம் முழுவதிலும் உள்ள எல்லாக் கல்வி நிறுவனங்களும், தனியார், தன்னார்வ நிறுவனங்களும் முண்டியடித்துக்கொண்டு முயற்சிகளை முன்னெடுக்கின்றன. 
 
இணையத்தின் வழியாக அல்லது செயலிகள், மென்பொருள்கள், வலைத்தளங்கள், மின்னிதழ்கள், ஒலி ஒளி மின்னூடகங்கள், மடற்குழுக்கள், சமூக வலைத்தளங்கள் முதலான இணைய ஏந்துகள்  வழியாகத் தமிழ்மொழியைக் கற்கவும் கற்பிக்கவும் வேண்டிய தேவைகள் அதிகரித்து வருகின்றன. ஆகவே, காலத்திற்கு ஏற்ற வகையில் புதிய அணுகுமுறையில் தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலை மேம்படுத்த வேண்டும். அதற்குரிய விரிவான வாய்ப்புகள் இன்று உருவாகி இருப்பதை ஊக்கத்துடன் வரவேற்று விரிவாகப் பயன்கொள்ள வேண்டும்.

புதன், 29 ஆகஸ்ட், 2012

tamil -athisudi


silappadikaram-


அஃதாவது - நின் கணவன் கள்வனல்லன்; அவனைக் கள்வன் என்ற இவ்வூரைத் தீயுண்ணுங்காண் என்று வானத்தெழுந்த தெய்வக் குரல் கேட்டவுடன் கண்ணகி சினம் மீக்கூர்ந்து தன்பால் எஞ்சியிருந்த ஒற்றைச் சிலம்பினையும் கையிலேந்திக் கொண்டு மதுரை மாநகரத்து வீதி வழியே சென்று இருமருங்கும் தன்னை நோக்கி இரங்கி நிற்கும் பத்தினிப் பெண்டிரை விளித்துப் பல்வேறு வஞ்சினம் மொழிந்து, கோவலன் கொலைப்பட்ட இடத்தை எய்துதலும், ஊர் மாந்தர் அவளைச் சூழ்ந்து இரங்கி ஆரவாரித்தலும், கண்ணகி கணவன் உடம்பினைக் கண்டு அழுதலும், பின்னர் அவன் மார்பின் மீது வீழ்ந்து தழுவிக் கொள்ளுதலும், கொலைப்பட்ட கோவலன் உயிர்பெற்று எழுந்து கண்ணகிக்கிரங்கி, அவள் கண்ணீரைத் தன் கையால் மாற்றுதலும், கண்ணகி அவன் அடிகளைக் கையாற் பற்றி அழுங்கால் நீ இருந்திடுக! என்று மறைந்துபோதலும், இதனால் மருட்சியுற்ற கண்ணகி என் சினந்தணிந்தன்றிக் கணவனோடு கூடுகிலேன். இத்தீவேந்தன் தனைக் கண்டு இங்ஙனம் செய்ததற்குக் காரணம் கேட்பல்! என்று எழுந்து தன் கண்ணீரைத் தானே துடைத்துக் கொண்டு அரசன் அரண்மனை முன்றிலை எய்துதலும், பிறவும் கூறும் பகுதி என்றவாறு. இது கூத்துப் போறலின் கூத்தாற் பெயர் பெற்றது என்க. வரி - கூத்து.
ஊர்சூழ் வரி என்னுந் தொடரை மதுரை மூதூரைக் கண்ணகி சூழ்ந்து சென்றது எனவும், மதுரை மாநகரத்து மாந்தர் கண்ணகியைச் சூழ்ந்தது எனவும் இருவகையானும் விரித்துப் பொருள் கூறுக.
என்றனன் வெய்யோன் இலங்கீர் வளைத்தோளி
நின்றிலள் நின்ற சிலம்பொன்று கையேந்தி
முறையில் அரசன்றன் ஊரிருந்து வாழும்
நிறையுடைப் பத்தினிப் பெண்டிர்காள் ஈதொன்று
பட்டேன் படாத துயரம் படுகாலை   5
உற்றேன் உறாதது உறுவனே ஈதொன்று
கள்வனோ அல்லன் கணவன்என் காற்சிலம்பு
கொள்ளும் விலைப்பொருட்டாற் கொன்றாரே ஈதொன்று
மாதர்த் தகைய மடவார்கண் முன்னரே
காதற் கணவனைக் காண்பனே ஈதொன்று  10
காதற் கணவனைக் கண்டா லவன்வாயில்
தீதறு நல்லுரை கேட்பனே ஈதொன்று
தீதறு நல்லுரை கேளா தொழிவேனேல்
நோதக்க செய்தாளென் றெள்ளல் இதுவொன்றென்று
அல்லலுற் றாற்றா தழுவாளைக் கண்டேங்கி  15
மல்லல் மதுரையா ரெல்லாருந் தாமயங்கிக்
களையாத துன்பமிக் காரிகைக்குக் காட்டி
வளையாத செங்கோல் வளைந்த திதுவென்கொல்
மன்னவர் மன்னன் மதிக்குடை வாள்வேந்தன்
தென்னவன் கொற்றம் சிதைந்த திதுவென்கொல்  20
மண்குளிரச் செய்யும் மறவேல் நெடுந்தகை
தண்குடை வெம்மை விளைத்த திதுவென்கொல்
செம்பொற் சிலம்பொன்று கையேந்தி நம்பொருட்டால்
வம்பப் பெருந்தெய்வம் வந்த திதுவென்கொல்
ஐயரி யுண்கண் அழுதேங்கி யரற்றுவாள்  25
தெய்வமுற்றாள் போலுந் தகைய ளிதுவென்கொல்
என்பன சொல்லி இனைந்தேங்கி யாற்றவும்
மன்பழி தூற்றுங் குடியதே மாமதுரைக்
கம்பலை மாக்கள் கணவனைத் தாங்காட்டச்
செம்பொற் கொடியனையாள் கண்டாளைத் தான்காணான் 30
மல்லன்மா ஞாலம் இருளூட்டி மாமலைமேற்
செவ்வென் கதிர்சுருங்கிச் செங்கதிரோன் சென்றொளிப்பப்
புல்லென் மருள்மாலைப் பூங்கொடியாள் பூசலிட
ஒல்லென் ஒலிபடைத்த தூர்;
வண்டார் இருங்குஞ்சி மாலைதன் வார்குழன்மேற்  35
கொண்டாள் தழீஇக் கொழுநன்பாற் காலைவாய்ப்
புண்தாழ் குருதி புறஞ்சோர மாலைவாய்க்
கண்டாள் அவன்றன்னைக் காணாக் கடுந்துயரம்
என்னுறு துயர்கண்டும் இடருறும் இவள்என்னீர்
பொன்னுறு நறுமேனி பொடியாடிக் கிடப்பதோ  40
மன்னுறு துயர்செய்த மறவினை யறியாதேற்கு
என்னுறு வினைகாணா இதுவென உரையாரோ
யாருமில் மருள்மாலை இடருறு தமியேன்முன்
தார்மலி மணிமார்பம் தரைமூழ்கிக் கிடப்பதோ
பார்மிகு பழிதூற்றப் பாண்டியன் தவறிழைப்ப  45
ஈர்வதோர் வினைகாணா இதுவென உரையாரோ
கண்பொழி புனல்சோரும் கடுவினை யுடையேன்முன்
புண்பொழி குருதியிராய்ப் பொடியாடிக் கிடப்பதோ
மன்பதை பழிதூற்ற மன்னவன் தவறிழைப்ப
உண்பதோர் வினைகாணா இதுவென உரையாரோ  50
பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல்
கொண்ட கொழுந ருறுகுறை தாங்குறூஉம்
பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல்
சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல்
ஈன்ற குழுவி எடுத்து வளர்க்குறூஉம்  55
சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல்
தெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல்
வைவாளில் தப்பிய மன்னவன் கூடலில்
தெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல்
என்றிவை சொல்லி அழுவாள் கணவன்றன்  60
பொன்துஞ்சு மார்பம் பொருந்தத் தழீஇக்கொள்ள
நின்றான் எழுந்து நிறைமதி வாள்முகம்
கன்றிய தென்றவள் கண்ணீர்கை யான்மாற்ற
அழுதேங்கி நிலத்தின்வீழ்ந் தாயிழையாள் தன்கணவன்
தொழுதகைய திருந்தடியைத் துணைவளைக்கை யாற்பற்றப் 65
 
பழுதொழிந் தெழுந்திருந்தான் பல்லமரர் குழாத்துளான்
எழுதெழில் மலருண்கண் இருந்தைக்க எனப்போனான்
மாயங்கொல் மற்றென்கொல் மருட்டியதோர் தெய்வங்கொல்
போயெங்கு நாடுகேன் பொருளுரையோ இதுவன்று
காய்சினந் தணிந்தன்றிக் கணவனைக் கைகூடேன்  70
தீவேந்தன் தனைக்கண்டித் திறங்கேட்பல் யானென்றாள்
என்றாள் எழுந்தாள் இடருற்ற தீக்கனா
நின்றாள் நினைந்தாள் நெடுங்கயற்கண் நீர்சோர
நின்றால் நினைந்தாள் நெடுங்கயற்கண் நீர்துடையாச்
சென்றால் அரசன் செழுங்கோயில் வாயில்முன்.  75
உரை
1-4: என்றனன் ....... ஈதொன்று
(இதன்பொருள்.) என்றனன் வெய்யோன் -கண்ணகி கதிரவனை நோக்கிக் காய்கதிர்ச் செல்வனே! என் கணவன் கள்வனோ என வினவியவளுக்கு மாதராய்! நின் கணவன் கள்வன் அல்லன் இவ்வூரை எரியுண்ணும் என்று அக் கதிரவன் விடை இறுத்தானாக; இலங்கு ஈர்வளைத்தோளி நின்றிலள் - அது கேட்டவுடன் விளங்குகின்ற அரியப்பட்ட சங்கு வளையணிந்த கைகளையுடைய அக் கண்ணகி ஒரு நொடிப்பொழுதும் அவ்விடத்தே நின்றாளில்லை; நின்ற சிலம்பு ஒன்று கையேந்தி-தன்பால் எஞ்சியிருந்த ஒற்றைச் சிலம்பினையும் தன் கையகத்தே ஏந்தியவளாய் அவ்விடைச்சேரியினின்றும் மதுரை நகரினுள்ளே விரைந்து போகின்றவள் ஆண்டு இருமருங்கினும் தன்னை நோக்கிக் கண்ணீர் உகுத்து நிற்கும் கற்புடை மகளிரை நோக்கி; முறையில் அரசன் தன் ஊர் இருந்து வாழும் நிறை உடைப் பத்தினிப் பெண்டிர்காள் - செங்கோன் முறைமை இல்லாத அரசனுடைய ஊரின்கண் இருந்து வாழுகின்ற கற்பையுடைய மகளிர்களே; ஈது ஒன்று - இதோ யான் கைப்பற்றியுள்ள இச்சிலம்பு அச்சிலம்பிற்கு இணையாய மற்றைச் சிலம்பு காண்! இதனைக் காணுங்கோள்! என்றாள்! என்க.
(விளக்கம்) சென்றாள் என்னாது நின்றிலள் என்றது அவ்விடத்தே அக்குரல் கேட்டபின் ஒரு நொடிப்பொழுதும் நின்றிலள் என்றுணர்த்துதற்கு என்க. நின்ற சிலம்பு என்றது கணவன்பால் கொடுத்ததொழியத் தன்பால் எஞ்சியிருந்த மற்றைச் சிலம்பினை. முறையில் அரசன் றன் ஊரிலிருந்து வாழும் பத்தினிப் பெண்டிர்காள் என்றது கொடுங்கோன் மன்னன் ஊரின்கண் வாழும் மகளிர் கற்புடையராய் இரார் என இகழ்ந்தவாறு. பின்னும் நீவிர் கற்புடை மகளிராயின் நும் மன்னன் இங்ஙனம் செங்கோல் பிழையான் என்று இகழ்ந்தவாறுமாம். இதனைப் பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு நீணிலவேந்தர் கொற்றம் சிதையாது எனவரும் கவுந்தியடிகளார் மொழியானும் காண்க. அருந்திறல் அரசர் முறைசெயின் அல்லது பெரும்பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாது எனப் (நடுகற் காதை, 207-8.) பின்வருதலும் நினைக.
இனி, ஈதொன்று என்பதற்கு - இஃதொரு தீவினை நிகழ்ந்தது காண்மின்! எனக் கோடலுமாம்.
5-8: பட்டேன் ............... ஈதொன்று
(இதன்பொருள்.) பட்டேன் படாத துயரம் யான் இவ்வுலகின் கண் பிறந்தாரொருவரும் படாத பெரும் துயரத்தைப் படுகின்றேன்; படுகாலை உற்றேன் உறாதது உறுவனே - இம் மாலைக் காலத்து இங்ஙனம் பிறர் யாரும் படாத துன்பத்தை யான் உற்றேன் இத்தகைய துன்பத்தினை யான் உறக்கடவேனோ; ஈது ஒன்று - இங்ஙனம் யான் துன்புறச் செய்தது நும்மரசன் கொடுங்கோல், இதுவும் நீயிர் அறியற்பாலதொன்று கண்டீர்! கள்வனோ அல்லன் கணவன் என் காற்சிலம்பு கொள்ளும் விலைப் பொருட்டாற் கொன்றாரே ஈது ஒன்று - என் கணவன் கள்வனல்லன்! எனது காற்சிலம்பின் விலையைக் கொடாது தாம் கைக்கொண்டு விடுதற்பொருட்டுக் கள்வனென்று ஒரு பெயரிட்டு அவனைக் கொன்றார்களே! இதும் நீவிர் அறியற்பாலதொன்று கண்டீர்! என்றாள்; என்க.
(விளக்கம்) உலகிற் பிறந்தார் படாத துயரம் என்க. படுகாலை - இறக்குங்காலத்தில் படும் துயர் எனினுமாம். உறாதது - படத்தகாத துன்பம். உறுவனே என்னும் ஏகாரம் எதிர்மறை. ஈதொன்று - இஃதொரு கொடுமை. யான் ஒரு வணிகன் மனைவி; தான் மன்னனாயிருந்தும் என் காற்சிலம்பு பெற்ற விலையைத் தாராமைப்பொருட்டு கள்வன் அல்லாத என் கணவனைக் கள்வனென்று ஒரு பெயரிட்டுக் கொன்றார்களே, இஃதொரு தீவினை இருந்தபடியை எல்லோரும் அறிமின் என்பாள் கள்வனோ .......... ஈதொன்று என்றாள்.
9-14: மாதர் ............... இதுவொன்றென்று
(இதன்பொருள்.) மாதர்த் தகைய மடவார் கண் முன்னரே - தத்தம் கணவன்மார் காதலிக்கும் தகுதியுடைய கற்புடைப் பெண்டிர்கண் முன்பே; காதல் கணவனை காண்பனே - என்னுடைய காதலை யுடைய கணவனே யான் பண்டுபோல உயிருடையவனாய்க் காண்பேன் காண், ஈதொன்று - இது நுமக்கு ஒரு புதுமையாய் இருக்குமன்றோ அதனையும் காணுங்கோள்; காதல் கணவனைக் கண்டால் - யான் என்காதற் கணவனை அங்ஙனம் கண்டபொழுது; அவன் வாயில் தீது அறு நல்லுரை கேட்பனே ஈது ஒன்று -அவன் என்னை நோக்கித் திருவாய் மலர்ந்தருளுகின்ற குற்றமில்லாத இனிய மொழியையும் நீயிர் காணும்படி ஒருதலையாகக் கேட்பேன் இதுவும் ஒரு புதுமையன்றோ இதனையும் காணுங்கோள்; தீது அறு நல்லுரை கேளாது ஒழிவேனல்  நோதக்க செய்தாள் என்று எள்ளல் இது வொன்று என்று - அங்ஙனம் தீதில்லாத நன்மொழியை அவன் திருவாயால் யான் நும் கண் முன்னே கேளா தொழிவேனாயின் இவள் இங்ஙனம் நிகழ்தற்குக் காரணமான தீவினைகளைச் செய்தவளே போலும் என்று என்னை எல்லீரும் இகழுங்கோள்! இதுவும் நுங்களுக்கு ஒரு வாய்ப்பாக அமையும் அன்றோ என்று இவ்வாறு கூறி, என்க.
(விளக்கம்) மாதர் - காதல்; காதலிக்கும் கற்புடை மடவார் என்றவாறு. அவர் கண் முன்னர் இது செய்தால் அவர்க்கும் சிறப்பாம் என்பது தோன்ற இங்ஙனம் கூறினள் என்க. காண்பனே என்றது உயிருடன் காண்பேன் என்று வீரம் பேசியவாறு. என்னை? இவன் தானும் வீரபத்தினியாதலின் என்க. இது வீரமறவர்க்குரிய நெடுமொழி வஞ்சி போல்வதொரு மறத்துறை என்க. அஃதாவது:
ஒன்னாதார் படைகெழுமித்
தன்னாண்மை எடுத்துரைத் தன்று
எனவரும். (புறப்பொருள் வெண் வஞ்சி -12.) நோதக்க - கணவன் கொலையுண்ணற்குக் காரணமான தீவினைகள் என்க. எள்ளல் - எள்ளுக; அல்லீற்று வியங்கோள், உடன்பாட்டின்கண் வந்தது. இற்றெனக் கிளத்தல் (தொல்.கிளவி-19) என்புழிப்போல. எள்ளல் இது ஒன்று என்றது, இப்பொழுது நுங்களையும் நும்மன்னனையும் இகழுகின்ற என்னை நீவிர் இகழுதற்கு இஃதொரு வாய்ப்பு என்றவாறு.
மதுரை மக்கள் கூற்று
15-22: அல்லலுற்று ........... இதுவென்கொல்
(இதன்பொருள்.) அல்லல் உற்று ஆற்றாது அழுவாளைக் கண்டு - இங்ஙனமாகப் பெருந்துயரமுற்று ஆற்றாது அழுகின்றவளைக் கண்டு அவள் துயரம் தம்மால் ஆற்றுதற்கு அரிய தொன்றாதலின் செயலறவால்; ஏங்கி - ஏக்கமுற்று; மல்லல் மதுரையார் எல்லாரும் தாம் மயங்கி - வளமுடைய அம் மதுரை நகரத்தே வாழ்கின்ற மாந்தரெல்லாம் தாமும் இரங்கி அழுது மயங்கிக் கூறுகின்றவர்; இக் காரிகைக்கு களையாத துன்பம் காட்டி-அந்தோ அழகிய இந்நங்கைக்கு எஞ்ஞான்றும் எவ்வாற்றானும் தீர்க்கப்படாத துன்பத்தை உண்டாக்குமாற்றால்; வளையாத செங்கோல் வளைந்தது இது என்கொல்-பண்டு ஒருபொழுதும் வளைந்தறியாத நம் மன்னனுடைய செங்கோலானது வளைந்தொழிந்ததே! இஃது என்னையோ? அறிகின்றிலேம் என்பாரும்; மன்னவர் மன்னன் மதிக்குடை வாள் வேந்தன் தென்னவன் கொற்றம் சிதைந்தது இது என்கொல் - மன்னவர்க்கெல்லாம் மன்னனும் திங்கள் போன்று மன்னுயிரையெல்லாம் மகிழ்விக்கும் கொற்ற வெண்குடையையும் வெற்றிவாளையும் உடைய வேந்தனும் செந்தமிழ் நாடாகிய இத்தென்னாட்டு மன்னவனும் ஆகிய நம்மன்னனுடைய கொற்றமும் சிதைந்தொழிந்ததே ஈதென்னையோ என்று மருள்வாரும்; மண் குளிரச் செய்யும் மறவேல் நெடுந்தகை தண்குடை வெம்மை விளைத்தது இது என்கொல் - நிலத்தில் வாழும் உயிர்களின் உளங்களெல்லாம் குளிரச்செய்கின்ற தண்ணளியையும் பகைவர் உளமெல்லாம் நடுங்கச்செய்யும் மறப்பண்புமிக்க வேலாலியன்ற நெடிய தெறலையும் உடைய நம் பெருந்தகை மன்னன் கவித்த குளிர்ந்த வெண்குடை இற்றை நாள் ஆற்றொணாத வெப்பத்தை விளைத்தது இஃதென்னையோ என்பாரும்; என்க.
(விளக்கம்) அல்லல் - துன்பம். அழுவாளை : கண்ணகியை. அவனை ஆற்றுவிக்க மாட்டாமையால் ஏங்கி என்க. களையாத துன்பம் என்றது கணவனை இழத்தலால் வந்த துன்பம் என்றவாறு. அவளது அழகையும் இளமையையும் நோக்கி இக்காரிகை என்றார். பண்டொரு காலத்தும் வளையாத செங்கோல் என்க. கொற்றத்திற்கு அறமே முதலாகலின் அறம் சிதையவே கொற்றமும் சிதைந்தது என்க. இது என்கொல் என்னும் வினாக்கள் யாதொன்றும் அறிகின்றிலேம் என்பது தோன்ற அவர்தம் மருட்கையை உணர்த்தி நின்றன. பின்வருவனவற்றிற்கும் இஃதொக்கும்.
இதனானே மேல் யாது வினையும் கொல்லோ என்றார் என இதுவென் கொல் என்பனவற்றிற்குப் பழைய ஆசிரியர் கூறும் உரை சிறப்பின்று. என்னை? அவர்கள் கண்ணகிக்கு இரங்காமல் இதனால் பின்னர்த் தமக்கு யாது விளையும் கொல்லோ என்று அஞ்சினர் என்பதுபட அவ்வுரை நிற்றலால் என்க.
23-28: செம்பொற் சிலம்பு .......... மாமதுரை
(இதன்பொருள்.) வம்பப் பெருந்தெய்வம் நம் பொருட்டால் செம்பொன் சிலம்பு ஒன்று கையேந்தி வந்தது இது என்கொல் - புதுமையையுடைய பெரிய தெய்வம் ஒன்று செம்பொன்னால் ஆகிய சிலம்பு ஒன்றனைத் தன் கையில் ஏந்திக்கொண்டு நம்மை ஆராய்தற்கு இவ்வாறு வந்ததுபோலும் இஃது என்ன மாயமோ என்பாரும்; ஐ அரி உண்கண் அழுது ஏங்கி அரற்றுவாள் தெய்வம் உற்றாள் போலும் தகையள் இது என்கொல் - வியத்தகு செவ்வரி பரந்த மையுண்ட கண்ணையுடையாள் இவள் தெய்வம் அல்லள் இவள்தானும் அழுதலையும் ஏங்கி அரற்றுதலையும் நோக்கின் தெய்வம் ஏறப்பெற்றாள் போலும் தன்மை உடையளாகக் காணப்படுகின்றாள். இஃதென்ன மாயமோ அறிகின்றிலேம் என்பாருமாய்; என்பன சொல்லி - என்று இன்னோரன்ன தத்தம் வாய் தந்தனவெல்லாங் கூறி; இனைந்து ஏங்கி ஆற்றவும் வன்பழி தூற்றும் குடியது மாமதுரை - வருந்தி ஏங்கி மிகவும் அரசனுடைய பெரும் பழியைத் துணிந்து தூற்றா நிற்கும் குடிமக்களை உடையதாயிற்று அற்றை நாள் அம்மதுரை மாநகரம் என்க.
(விளக்கம்) கண்ணகி தானும் இறந்துபோன கணவனை உயிருடன் காண்பேன் என்றும், அவன் வாயில் நல்லுரை கேட்பேன் என்றும், கூறக் கேட்டவருள் ஒருசிலர் இவள் மானுட மகளல்லள் தெய்வமே போலும்! தெய்வம் இங்ஙனம் வந்தது நம்மன்னன் செங்கோன்மையை ஆராய்தற்பொருட்டுப் போலும் என்பார், செம்பொற் சிலம்பு ........... ...... வம்பப் பெருந்தெய்வம் வந்ததிது வென்கொல் என்றார் என்க.
மற்று, அதுகேட்ட வேறு சிலர் கண்ணகியின் கண் முதலிய உறுப்புகளையும் செயல்களையும் நோக்குமின்! அவள் இங்ஙனம் பொருந்தாமை கூறக் காரணம் அவள்மேல் தெய்வம் ஏறினமையே என்பார், தெய்வம் அல்லள் தெய்வம் உற்றாள் போலும் என்றனர் என்க. இவரெல்லாம் பெரிதும் மருட்கை கொண்டவர் என்க. இவ்வாறாக அம் மதுரை நகரத்து மாந்தர் இவள் மானுட மகளாக, தெய்வமேயாக, அல்லது தெய்வம் உற்றாளேயாக, ஆற்றொணாத் துயரந்தரும் இந்நிகழ்ச்சிக்கெல்லாம் மன்னன்கோல் வளைந்ததே காரணம் என்றுட்கொண்டு இதனால் வந்த பழியும் எளியதொன்றன்று மிகவும் பெரிய தொரு பழியே என்று கருதி அற்றைநாள் அம்மதுரைமா நகரத்துக் குடிமக்கள் அனைவரும் அரசனுடைய பழியைத் தூற்றுபவரே ஆயினர் என்பார் அடிகளார் வன்புழி தூற்றும் குடியதே மதுரை என்றார். ஏகாரம் தேற்றப்பொருட்டு. மாமதுரை என்றது அதன் பழம்பெருமை கருதியவாறாம்.
கண்ணகி காதலனைக் கொலைக்களத்தே காண்டல்
29-34: கம்பலை ............. படைத்த தூர்
(இதன்பொருள்.) கம்பலை மாக்கள் தாம் கணவனைக் காட்ட - இவ்வாறு வன்பழி தூற்றி ஆரவாரம் செய்து நின்ற மக்களுள் ஒரு சிலர், தாமே முன்வந்து கண்ணகியை அழைத்துக் கொடு போய்க் கொலையுண்டு கிடந்த கோவலனைக் காட்டா நிற்ப; செம்பொன் கொடி அனையாள் கண்டாளை - செம்பொன்னால் இயன்றதொரு பூங்கொடி போல்வாளாகிய கண்ணகி தன்னைக் கண்டவளை; தான் காணான் - அக்கோவலன் கண்டானிலன் அப்பொழுது; மல்லல் மாஞாலம் இருள் ஊட்டிச் செங்கதிரோன் - வளம் பொருந்திய இப்பேருலகத்தை இருள் விழுங்கும்படி செய்து சிவந்த கதிரையுடைய ஞாயிற்றுக் கடவுள்; கதிர் சுருங்கி - இக்காட்சியைக் காணப்பொறான் போலே சிவந்த தன்ஒளி சுருங்கப்பெற்று; மாமலை மேல் சென்று ஒளிப்ப - பெரிய மேலை மலையின்பால் சென்று மறையா நிற்ப; புல் என் மருள்மாலை பூங்கொடியாள் பூசலிட - பொலிவிழந்த மருட்சியைத் தருகின்ற அந்த மாலைப் பொழுதிலே பூங்கொடிபோல் வாளாகிய கண்ணகி தன் கணவனிடத்திருந்து அழுது புலம்புதலாலே; அவ்வூர் ஒல்லென ஒலி படைத்தது - அவ்வூரார் தாமும் அவட்கிரங்கிப் பற்பல சொல்லிப் புலம்புதலாலே அம்மதுரையில் யாண்டும் ஒல்லென்னும் ஒலியெழுந்தது என்க.
(விளக்கம்) கம்பலை - ஆரவாரம். கம்பலைமாக்கள் என்பதற்கு வேறு சிலர். எனவும் வேறுசில காட்சிகண்டு திரியுமவர் எனவும் வருகின்ற பழையவுரை மிகை. கம்பலை மாக்களுள் சிலர் எனவே அமையும். வன்பழி தூற்றும் குடியதே மாமதுரை என்றமையால் எல்லோரும் கம்பலை மாக்களே என்க. தாம் என்றது தாமே துணிந்து முன்வந்து என்பதுபட நின்றது. என்னை? அங்ஙனம் வருவோர் அரியர் ஆகலான் என்க. தான் காணான் என்றது கொலையுண்டு கிடந்தமையை வேறு வாய்பாட்டாற் கூறியவாறு. மல்லன் மாஞாலம் என்றது இகழ்ச்சி. இங்ஙனம் காணப்பொறாத நிகழ்ச்சியுடைத்து என்னும் வெறுப்பினாலே இவ்வுலகத்தை இருளூட்டி யாம் எத்துணை ஒளி செய்யினும் இம்மாந்தரின் அறியாமை இருள் போக்குதல் அரிது என்னும் எண்ணத்தால் செங்கதிர்ச் செல்வன் தன் கதிர்கள் சுருங்கா நிற்ப இப்பொல்லாக் காட்சியைக் காண்டல் இனி நமக்கொல்லாதாம் என்பான் போலச் சென்றொளிப்ப என்பதுபட இவ்விரண்டடிகளும் நிற்றலுணர்க.
35-38: வண்டார் ........... கடுந்துயரம்
(இதன்பொருள்.) காலை வாய் தழீஅ கொழுநன்பால் வண்டுஆர் அருங்குஞ்சி மாலை தன்வார் குழல் மேல் கொண்டாள் -அற்றைநாள் விடியற் காலத்தே இடைச்சேரியின்கண் பூவலூட்டிய புது மனைக்கண் தன் கணவனைத் தழுவிக்கொண்டு அவன் அதற்குக் கைம்மாறாகக் கொடுத்த அவனுடைய வண்டு ஒலிக்கும் கரிய தலைமயிரில் சூட்டிய மாலையை வாங்கித் தனது நீண்ட கூந்தலின் மேல் அணிந்துகொண்ட கண்ணகி; மாலை வாய் - அற்றை நாள் அந்திமாலைப் பொழுதிலேயே; புண்தாழ் குருதி புறஞ்சோர அவன் தன்னைக் காணாக் கடுந்துயரம் கண்டாள் - மெய்யின்கட் புண்ணினின்றும் புறத்தே குதிக்கின்ற குருதியின்கண் கிடக்கும் அவன், தன்னைக் காணாமையாகிய பெரும் துயரத்தைத் தான் கண்டாள் என்க.
(விளக்கம்) ஆர் - ஒலித்தல், குஞ்சி - ஆண் மயிர். கணவன் தன்னைக் காணாததனைத் தான் கண்டாள் என்றது அமங்கலத்தை மங்கலமாகக் கூறியவாறு.
கண்ணகியின் கையறுநிலை
39-42: என்னுறு ............ உரையாரோ
(இதன்பொருள்.) என் உறு துயர் கண்டும் இவள் இடர் உறும் என்னீர் - பெரும! என்னுடைய தனிமை மிக்க துயரத்தைக் கண்டு வைத்தும் யாம் வாய் வாளாது கிடப்பின் இவள் துன்புறுவாள் என்று இரங்குகின்றிலீர்; பொன்உறு நறுமேனி பொடி ஆடிக்கிடப்பதோ - பொற்சுண்ணம் ஆடுதற்கியன்ற நும்முடைய நறிய திருமேனிதான் இவ்வாறு புழுதி படிந்து கிடக்கத் தகுமோ? மன்உறு துயர் செய்த மறவினை அறியாதேற்கு - மன்னன் செய்த மிக்க துன்பத்தைச் செய்த தீவினை இத்தகையது என அறியமாட்டாத எனக்கு; என்உறு வினைகாணா இது என உரையாரோ - என் தீவினையே எனக்கு இங்ஙனம் நிகழ்ந்தது காண் என்று இவ்வூரார் சொல்லாரோ, என்றாள் என்க.
(விளக்கம்) பொன் போன்ற மேனி எனினுமாம். பொடி - புழுதி. மன்னனுடைய மறவினை; எனக்குத் துயர் செய்த வினை என இயைக்க. இனி நிலைபெற்ற துயர் செய்த இம்மறவினையை இப்பெற்றியால் முடிந்ததென அறியாதேற்கு எனினுமாம். காணா என்புழி ஆகாரம், அசைச்சொல்.
43-46: யாருமில் ........... உரையாயோ
(இதன்பொருள்.) யாரும் இல் மருள் மாலை - துணையாவார் யாரும் இல்லாத மருட்சியையுடைய இம் மாலைப் பொழுதிலே; இடர் உறு தமியேன் முன் - துன்பமிக்க தமியேனாகிய என் கண் முன்னர்; தார்மலி மணிமார்பம் தரைமூழ்கிக் கிடப்பதோ - மலர் மாலையுள் மூழ்குகின்ற அழகிய நும்முடைய மார்பம் வறிய நிலத்தின்கண் புழுதியில் அழுந்திக் கிடக்கத் தகுவதொன்றோ; பார்மிகு பழிதூற்றப் பாண்டியன் தவறு இழைப்ப - உலகத்திலுள்ளோரெல்லாம் மிகப்பெரிதும் தனது பழியைத் தூற்றும்படி இப்பாண்டிய மன்னன் தவறு செய்தானாகவும்; ஈர்வது ஓர் வினைகாண் ஆ இது என உரையாரோ - இந்நாட்டிலுள்ளார் நின் கணவனை இங்ஙனம் வெட்டுதற்குக் காரணமாக முற்பிறப்பில் நீ செய்த தீவினை காண் இஃது என்று கூறமாட்டாரோ, என்றாள் என்க.
(விளக்கம்) துணையாவார் யாரும் எனவும் கண்முன் எனவும் கூறிக்கொள்க. ஈர்வதோர் வினை வெட்டுவிப்பதற்குக் காரணமான பெரிய தீவினை, என்க.
47-50: கண்பொழி ........... உரையாரோ
(இதன்பொருள்.) கண்பொழி புனல்சோரும் கடுவினை உடையேன் முன் - என் கண்கள் பொழியும் கண்ணீர் இங்ஙனம் இடையறாது சொரிதற்குக் காரணமான கொடிய தீவினையை உடையேனாகிய என் முன்னர் நீவிர்; புண்பொழி குருதியிராய்ப் பொடி ஆடிக் கிடப்பதோ - வெட்டுண்ட புண்ணினின்றும் குதித்துப் பெருகும் குருதியை உடையீராய் இவ்வாறு புழுதியில் படிந்து கிடப்பது நுமக்குத் தகுவதேயோ; மன்பதை பழிதூற்ற மன்னவன் தவறு இழைப்ப - இவ் வுலகத்திலுள்ள மாந்தரெல்லாம் தன் பழியை எவ்விடத்தும் தூற்றாநிற்ப இந்நகரத்து மன்னன் இத் தவற்றினைச் செய்யாநிற்பவும்; இது உண்பது ஓர் வினைகாண் ஆ என உரையாரோ - இதற்குக் காரணம் நீ இங்ஙனம் துன்பம் நுகர்தற்கு உரிய உனது ஊழ்வினையே காண் என்று இந்நாட்டிலுள்ளோர் என்னையும் பழிதூற்றார்களோ என்றாள்; என்க.
(விளக்கம்) கடுவினை - கொடிய தீவினை. கண்முன் என்க. குருதியிர் -குருதியை யுடையீர். மன்பதை - மக்கள் தொகுதி. உண்பது - நுகர்தற்குரிய. வினை என்றது அதன் பயனை. இவையெல்லாம் அழுகையைச் சார்ந்த வெகுளியால் கூறப்பட்டன, மேல் வருவனவும் அன்ன. உண்பதோர் வினை - நின் கணவன் உயிர் உண்பதாகிய பெரிய தீவினை எனினுமாம்.
இவை மூன்றும் முதுபாலை என்னும் காஞ்சித் திணைத்துறை; என்னை? நனிமிகு சுரத்திடைக் கணவனை யிழந்து, தனிமகன் புலம்பிய முதுபாலையும் என்பது விதியாகலான் என்க. (தொல், புறத்திணை: 24)
51-61: பெண்டிரும் ........... தழீஇக்கொள்ள
(இதன்பொருள்.) பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டு கொல் - கற்புடை மகளிரும் உளரேயோ! கற்புடை மகளிரும் உளரேயோ! கொண்ட கொழுநர் உறுகுறை தாங்குறூஉம் - தம்மை மணந்துகொண்ட கணவன்மார் செய்த பெருங்குற்றங்களையும் பொறுத்துக்கொள்ளும் சால்புடைய; பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல் - கற்புடை மகளிரும் உளரேயோ! கற்புடை மகளிரும் உளரேயோ! சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல் - சான்றோரும் உளரேயோ! சான்றோரும் உளரேயோ! ஈன்ற குழவி எடுத்து வளர்க்குறூஉம் - பிறர் ஈன்ற மகவினையும் தம் மகப்போலக் கைக்கொண்டு தாய்போல வளர்க்கின்ற அன்பு முதலிய குணங்களால் நிறைந்த; சான்றோரும் உண்டு கொல்! சான்றோரும் உண்டுகொல் - சான்றோரும் உளரேயோ! சான்றோரும் உளரேயோ! தெய்வமும் உண்டுகொல்! தெய்வமும் உண்டுகொல்! - தெய்வமும் உளதேயோ! தெய்வமும் உளதேயோ!! வை வாளில் தப்பிய மன்னவன் கூடலில் - கூரிய வாள் உடைய செருக்கினாலே செங்கோன்மையினின்று இழுக்கிய இப் பாண்டியனது இக் கூடலிடத்தே; தெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல் - தெய்வமும் உளதேயோ! தெய்வமும் உளதேயோ!; என்று இவை சொல்லி அழுவாள் - என்று இன்னோரன்ன பல சொல்லி அழுகின்ற கண்ணகி; கணவன் தன் பொன்துஞ்சு மார்பம் பொருந்தத் தழீஇக்கொள்ள - தன் கணவனுடைய திருமகள் வீற்றிருக்கும் சிறப்பான மார்பம் தன் மார்போடு பொருந்தும்படி தழுவிக் கொண்டாளாக அவ்வளவில்; என்க.
(விளக்கம்) கற்புடைப் பெண்டிரும் சான்றோரும் தெய்வமும் இக்கூடலில் உண்டாயின் இத்தகைய பெருந்தீவினை நிகழ்ந்திராது ஆதலால் இவர்கள் இங்கு இல்லைபோலும் என்றவாறு. பெண்டிர்- கற்புடைப் பெண்டிர் என்பதுபட நின்றது. கொழுநன் எத்தகைய குற்றம் செய்தாலும் பொறுத்துக்கோடலே கற்புடைப் பெண்டிரின் கடமை என்பது இத்திருமா பத்தினியின் குறிக்கோளாதலின் அக் குறிக்கோளையே கற்புடை மகளிர்க்குச் சிறந்த அடைமொழியாக்கிக் கொண்ட கொழுநர் உறுகுறை தாங்குறூஉம் பெண்டிரும் உண்டுகொல் என்றாள். இதுவே கண்ணகியின் உட்கோள் ஆகும் என்பதனை:
போற்றா வொழுக்கம் புரிந்தீர் யாவதும்
மாற்றா உள்ள வாழ்க்கையே னாதலின்
ஏற்றெழுந் தனன்யான் என்றவள் கூற
எனவரும் அவள் கூற்றாலேயே (கொலைக்களக், 81-83.) அறிக. எடுத்து வளர்க்குறூஉம் என்றமையால் ஏதிலார் ஈன்ற குழவி என்க. தாமீன்ற குழவியை வளர்ப்பது சால்புடைமைக்கு அறிகுறி என்னல் ஆகாமையும் அறிக. வைவாளில் தப்பிய என்றது கல்லாக் களிமகன் வாளை மன்னன் வாளாகக் கொண்டு கூறியபடியாம். படை வலிமையுண்மையால் பொச்சாப் பெய்திச் செங்கோன்மையிற் றப்பிய எனினுமாம். பொன் - திருமகள். மார்பம் தன்மார்பம் பொருந்தா என்க.
62-67: நின்றான் ......... போனான்
(இதன்பொருள்.) எழுந்து நின்றான் - கோவலன் உயிர்பெற்று எழுந்து நின்றவன்; நிறைமதி வாள்முகம் கன்றியது என்று - நிறைவெண் திங்கள் போன்ற ஒளி பொருந்திய நின் முகம் கன்றியதே என்று வாய் திறந்து பரிந்து சொல்லி; அவள் கண்ணீர் கையால் மாற்ற - அவள் கண்ணீரைத் தன் கையால் துடைத்து மாற்றா நிற்ப; ஆயிழையாள் ஏங்கி அழுது நிலத்தின் வீழ்ந்து தன் கணவன் தொழுதகைய திருந்து அடியை வளைக்கைத் துணையால் பற்ற - அவ்வளவில் அக் கண்ணகி ஏங்கியழுது நிலத்தின் கண்ணே வீழ்ந்து தன் கணவனுடைய பலரும் தொழத் தகுந்த திருந்திய திருவடிகளை வளையலணிந்த தன் கைகளிரண்டானும் ஆர்வத்தோடு பற்றிக்கொள்ள அவ்வளவில்; பழுது ஒளிந்து எழுந்திருந்தான் - வெட்டுண்டமையினாலுண்டான உடம்பின் பழுது தீர்ந்து உயிரோடு எழுந்திருந்தவனாகிய அக்கோவலன்; எழுது எழில் மலர் உண்கண் இருந்தைக்க எனப்போனான் - ஓவியத்தில் எழுதிய அழகிய மலர் போன்ற மையுண்ட கண்ணையுடையோய்! நீ இருந்திடுக! என்று கூறி மறைந்துபோனவன்; பல் அமரர் குழாத்துளான் - தன்னை எதிர்கொள்ள வந்து வானத்தில் குழுமிய பல தேவர்களுடைய குழுவின்கண் உளன் ஆயினான் என்க.
(விளக்கம்) எழுந்து நின்றான் என மாறுக, அஃது உயிருடன் எழுந்து நின்றான் என்பதுபட நின்றது. கன்றியது என்று என்பது, கன்றியது என்று பரிந்து சொல்லி என்பதுபட நின்றது. ஏங்கியழுது, என மாறுக. தொழுதகைய என்றது பலரும் தொழும் தகுதியையுடைய என்பதுபட நின்றது. கணவன் திருவடியை அவட்குத் தொழுதகைய திருந்தடி என்னல் வேண்டாமை யுணர்க. கைத்துணையால் பற்ற என மாறுக. இஃது ஆர்வத்துடன் பற்ற என்பதுபட நின்றது. பழுது வாளேறுண்டைமையும் குருதி வழிந்தமையும் முதலிய பழுதுகள் என்க. கோவலன் அங்ஙனம் உயிர்பெற்றெழுந்த அவ்வுடம்போடு அமரர் குழுவிற் சேர்ந்தான் என்பதே இளங்கோவடிகளாரின் கருத்தாகும். இக்கருத்தினை முன்னைய உரையாசிரியர்கள் யாரும் அறிந்ததாகத் தோன்றவில்லை கண்ணகியும் கானவர் கட்புலங் காணத் தனதுடம்போடே விட்புலம் புகக் கண்டதாக அக் கானவர் கூறியதனால், இங்கும் அவன் இவ்வுடம்போடு துறக்கம் புக்கான் என்பதே நூலாசிரியர் கருத்தாதல் தேற்றம். அங்ஙனம் கூறலே முறைமையுமாம் என்க. இக் கருத்துணரும் மதுகையின்மையால் இதற்கு முன்னையோர் கூறிய உரைகள் போலி உரை என்றொழிக. செய்யுளும் அவர் கருத்திற் கிணங்காமையால் தத்தம் வாய்தந்தன பிதற்றி யொழிந்தனர்.
அணிசெய் காவியம் ஆயிரம்கற்கினும் கவியுனம் காண்கிலார் என்னும் பாரதியார் செய்யுட்கு இவ்விடத்தே பழைய புதிய உரையாசிரியரனைவரும் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்வாராயினர் மன்!
68-71: மாயங்கொல் ............... யானென்றான்
(இதன்பொருள்.) மாயங்கொல் மற்றென்கொல் மருட்டியது ஓர் தெய்வங்கொல் - கண்ணகி தன் கையாற் பற்றப்பெற்ற அடிகளையுடைய கோவலன் அவட்கு வறுங்கை காட்டி அவள் கண்காணாமல் அவ்வுடம்போடு துறக்கம் புகுவான் மறைந்து போனமையால் மருண்டவளாய் ஈதொரு மாயமோ! இல்லை யெனில் பின் என்னையோ? இவ்வாறு என்னை மருளச்செய்ததொரு தெய்வமும் இங்கு உண்டுகொல்லோ; எங்குப் போய் நாடுகேன் - என் கண் காணாமல் மறைந்துபோன என் காதலனை இனி யான் எங்கே போய்த் தேடிக்காண்பேனோ; பொருளுரையோ இது அன்று - என் காதலன் நீ இங்கு இருந்திடுக என்று பணித்தது பொருளுடையதொரு சொல்லாகுமோ? இல்லை இல்லை அது பொருளுரையன்று! நன்று நன்று; காய் சினந்தணிந்து அன்றிக் கணவனைக் கைகூடேன் - என் உள்ளத்தைச் சுடுகின்ற இச் சினத்தீத் தணிந்தபின் என் கணவனை நாடிப் போய்க் கூடுவதல்லது தணியாமல் அவனைத் தேடிக் கூடுகிலேன்; தீவேந்தன்தனைக் கண்டு - எம்மை இப் பெரும் பழிக்காளாக்கிய கொடுங்கோல் மன்னனாகிய பாண்டியனை நேரில் கண்டு; யான் திறன் கேட்பல் - யான் இதற்குக் காரணங்கேட்டு அறிகுவன்; என்றாள் - என்று வெகுண்டாள், என்க.
(விளக்கம்) மறைந்தவன் எவ்விடத்தான் என்று அறியாமையின் எங்குப்போய் நாடுவேன் என்றாள். தான் மறைந்த பின்னரும் யான் உயிர்தாங்கி இருக்கலாகாமையின் அவன் இருந்தைக்க என்று சொன்ன சொல் வறுஞ்சொல் என்பாள் இதுபொருள் உரை அன்று என்றாள். மன்னவன் தம்மீது அடாப்பழி சுமத்திக் கொன்றான் என்பது கருதி அவன்பால் எழுந்த சினம் மிகுந்துவருதலால் இதற்குத் தீர்வு கண்டன்றி யான் கணவனை நாடிச் சென்றடையேன் என்று தன்னுள் உறுதி கொண்டபடியாம். என்னை?
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்  - குறள். 46.
என்பது, கற்புடை மகளிர்க்கிலக்கணம் ஆகலின் என்க. தீவேந்தன் - கொடுங்கோல் அரசன். இத்திறம் இங்ஙனம் செய்தற்குரிய காரணம். என்றாள் என்பது என்று சினந்தாள் என்பதுபட நின்றது.
கண்ணகி அரண்மனை வாயிலை அடைதல்
72-75: என்றாள் ........... வாயில்முன்
(இதன்பொருள்.) என்றாள் எழுந்தாள் - என்று சினந்தெழுந்த கண்ணகி; இடருற்ற தீக்கனா நின்றாள் நினைந்தாள் - எழுந்தவளுக்குத் தான் ஊரிற்கண்ட தீய கனா தன் நினைவில் வந்துற்றமையால் எழுந்தாங்கு அக்கனவையும் அதனைத் தான் தேவந்திக்குச் சொன்னமையையும் சிறிதுபொழுது நின்று நினைத்துப் பார்த்தாள்; நெடுங்கயல் கண் நீர் சோர நின்றாள் நினைந்தாள் - தனது நெடிய கயல்போலும் கண்களினின்றும் நீர் சொரியும்படி அங்ஙனம் நின்று நினைத்தவளுக்கு அக் கனவிற் கண்டனவெல்லாம் கண்டவாறே நிகழ்ந்து வருதலும் அவற்றிற்கேற்பக் கோவலன் தீங்குற்ற பின்னர்த் தான் காவலன் முன்னர்சென்று கட்டுரைத்தமையும் நினைவில் வந்தமையின் அங்ஙனமே நிகழ்வதாக என்று துணிந்து; நெடுங்கயற்கண் நீர்துடையா - தனது கயல்போலும் கண்ணிற்பெருகி - மறைக்கின்ற நீரைத் துடைத்துக் கொண்டு; அரசன் செழுங்கோயில் வாயில்முன் சென்றாள் - விரைந்து அப்பாண்டிய மன்னனுடைய வளவிய அரண்மனை முன்றிலின் கண் சென்றனள், என்க.
(விளக்கம்) மறைந்தவுடன் வேந்தனைக் கண்டு இத்திறம் கேட்பல் என்று எண்ணி எழுந்த கண்ணகி இவ்வாறே தான் பண்டு கனவு கண்டமையையும், அக்கனாக் காட்சியே இதுகாறும் பலித்து வருவதனையும் நினைத்தாள். அக்கனவில் மன்னன்முன் தான்சென்று வழக்குரைத்தமையும் கண்டிருந்தாளாதலின் அதற்கேற்பவே தனக்கு எண்ணமும் தோன்றுதலால் இனி அதுவே நிகழும் போலும், நிகழவும் வேண்டும், யான் இப்பொழுதே அத் தீவேந்தன்பால் செல்கின்றேன் என்று துணிவு கொண்டு அக்கருத்திற்கேற்ப விரைந்து கோயில் வாயின்முன் சென்றாள் என்க. கண்ணீர் துடைத்தது வழிதெரிதற் பொருட்டு.
பா - மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா