வெள்ளி, 14 ஜூன், 2013

தமிழ்மொழி - தொடக்கக்கல்வி - கற்றல்-கற்பித்தல் - ஓர் ஆய்வு

தமிழ்மொழி - தொடக்கக்கல்வி - கற்றல்-கற்பித்தல் - ஓர் ஆய்வு
                                           முனைவர். பி.ஆர் இலட்சுமி                                        
                                              தமிழ்த்துறை வல்லுநர்
                                                                        சென்னை-66.
அறிவியல் வளர்ச்சியின் முன்னேற்றம் காரணமாகத் தமிழ்மொழி –கற்றல் - கற்பித்தலில் பல இடர்பாடுகள் ஏற்படுகின்றன. இன்றைய காலகட்டத்தில் தமிழ் மொழியைக் கற்க மாணவர்கள் மறுக்கும் நிலை உருவாகியுள்ளது. தமிழ்மொழியின் எழுத்துகளைச் சரிவரக் கற்காததினால் மாணவர்களின் படைப்புத்திறன் குறைந்துள்ளது. இதற்குத் தொடக்கக்கல்வியில் கற்றல்-கற்பித்தல் சிறப்புற நிகழ்தல் அவசியமாகிறது. இதன்வழி வகுப்பறையில் தமிழ்மொழியின் கற்றல்திறன் அதிகரிக்கும். தொடக்கநிலைக் கல்வியில் தமிழ் கற்றல்- கற்பித்தல் குறித்து இவ்வாய்வுக்கட்டுரை  எடுத்துரைக்கின்றது.
மொழி கற்றலின் நோக்கம்
மொழி கற்றலின் நோக்கம் பண்பாட்டை அறிந்து அதன்வழி நடத்தல், மொழியறிவை வளர்த்தல், சொற்களஞ்சியத்தைப் பெருக்குதல், தெளிவான முறையில் எழுதுவதற்கு உரிய ஆற்றலை வெளிப்படுத்துதல், தன்னை உணர்ந்து தானே நிற்றல் போன்றவையாகும்.
“எத்தகைய கல்வி நல்ல ஒழுக்கத்தை உருவாக்குமோ, மன வலிமையை வளர்க்கச் செய்யுமோ, விரிந்த அறிவைத் தருமோ, ஒருவனைச் சுயவலிமையைக்  கொண்டு ஏற்கச் செய்யுமோ அத்தகைய கல்விதான் நமக்குத் தேவை“ என்ற  சுவாமி விவேகானந்தர் கருத்துப்படி ஆசிரியர் கற்பித்தலை நடத்துதல் இன்றியமையாதது.                            
மொழி கற்பித்தலின் நிலைகள்
v  திட்டமிடல், வழங்கல், விளக்கல், படிகள், மதிப்பிடல் – மொழி கற்பித்தலின் நிலைகள் எனக் குறிப்பிடப்படுகிறது.
திட்டமிடல், வழங்கல், விளக்கல் போன்றவை விளையாட்டு முறையில் அமைந்தால் தொடக்கக்கல்வி நிலையில் தமிழ்மொழி கற்றல் சிறப்புடன் அமையும்.
1. கேட்டல்
2. படித்தல்
3. பார்த்தல்  
4. எழுதுதல்
5. நுகர்தல்
6. பகுத்தாய்தல்
7. தொடர்புடைய இணையைத் தேடுதல்
8. கருத்து உருவாக்கல்
9. வண்ணம் பற்றிய கருத்து
10. வடிவம்

போன்றவை தொடக்கக்கல்வி நிலையில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
கற்பித்தல் முறைகள்
தமிழ் மொழி கற்பதற்கு  எளிமையானது. இம்மொழியினை ஆர்வம்  உண்டாக்கும் முறையில் கற்பித்தல் ஆசிரியரின் கடமையாகிறது.
தமிழ்மொழி கற்பித்தலில் விளையாட்டுமுறை, நடிப்புமுறை, மேற்பார்வைப்படிப்புமுறை, செயல்திட்டமுறை, ஒப்பந்தமுறை, கண்டறி முறை, உரையாடல் சொற்பொழிவுமுறை, திட்டமிட்டதைக் கற்றல்முறை, மொழிப் பயிற்றாய்வுக்கூடமுறை, கட்டுரை படித்தல், பலர் கருத்துகளைத் திரட்டல், செயல்முறைக்கருத்தரங்கு, சொற்போர் போன்றவை பின்பற்றப்படுகின்றன.

மாணவன் சுயமாகச் செயல்படுதல், படைப்பாற்றல், சமூகப் பங்கேற்பு  இம்மூன்றிலும் சிறந்தோங்கும் முறையில்   தொடக்கக் கல்வி அமைதல் வேண்டும்.
v  மாணவர்களுக்கு ஆர்வமானவற்றைக் கற்பித்தல்
v  எளிமையான முறையில் ஆசிரியர்கள் பாடப்பொருளை அமைத்தல்.
v  நேர்முறை – சொல்லுக்கு முன் பொருள் – பருப்பொருள் கொண்டு கற்பித்தல்.
v  விதி, தத்துவம் முதலில் கூறி விட்டு உதாரணம் கொடுத்து விளக்குதல்.
v  ஒன்றைப் புரிந்து கொண்ட பின்னரே அடுத்த பகுதிக்குச் செல்லுதல்
v  ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்திக் கற்பித்தல்.
v  துண்டு துண்டான கருத்துக்களைக் கூறாமல் முன் நடத்தியதுடன் தொடர்புபடுத்திக் கற்பித்தல்.
v  நடைமுறையில் பயன்படுத்தக் கூடியவற்றைக் கற்பித்தல்.
v  பல கருத்துக்கள் இருப்பின் அவற்றை வரிசைப்படுத்தி ஒவ்வொன்றாகக்  கற்பித்தல்.
போன்ற கற்பித்தலின் முறையின்படி கற்றல் நடைபெறுதல் வேண்டும்.
மொழி கற்பிப்பதில் உரையாடல் பயிற்சி
மொழி கற்பிப்பதில் உரையாடல் பயிற்சி இன்றியமையாததாகும்.
v  இயல்பாகவும் தொடர்ச்சியாகவும் உரையாடுகிற திறன்
v  சரியான உச்சரிப்புடன், தெளிவாகப் பொருள் விளங்குமாறு உரையாடுதல்
v  செய்திகளை நுட்பமாகத்திரட்டி, உடல் அசைவுடன் விளங்குகிற உரையாடல்
v  நிகழ்ச்சிகளையும், சூழ்நிலைகளையும் அப்படியே கண்முன் காட்டுகிற வகையிலான உரையாடல்.
v  உரையாடலைப் பதற்றமில்லாமல், தெளிவாக, நுட்பமாகப் பயிற்றுவித்தல்.
போன்றவற்றில் தொடக்கக்கல்வி ஆசிரியர் திறன் பெற்றிருத்தல் வேண்டும்.
துணைக்கருவிகள்
துணைக்கருவிகள் இல்லா வகுப்பறை மலர்களில்லாத் தோட்டம் போன்றது. துணைக்கருவிகளின் தெளிவு பற்றிய தரவுகள் தெளிவுபடக் கிடைக்காமையே காரணம் எனலாம். தொடக்கக்கல்வி நிலையில் பாடப்பொருளுக்கு ஏற்ற 
v  மின்அட்டை
v  சுழல் அட்டை
v  கரும்பலகைப் பயன்பாடு
v  உள்ளரங்க, வெளியரங்க விளையாட்டுத் துணைக்கருவிகள்
v  ஆசிரியரின் கற்பனைக்கேற்ற வகையில் சுயமாகத் தயாரித்த பாடப்பொருள் – தொடர்பான துணைக்கருவிகள்  பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றின் வழியே தமிழ் கற்பித்தல் நடைபெறுவதால் மாணவன் கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் போன்ற திறன்களை எளிதில் அடைய இயலுகிறது.
இணையம் வழி தமிழ் கற்பித்தல்
தமிழ் எழுதும் முறை (மென்பொருள் பயன்பாடு), மின்அட்டை, இதழ்கள், மின் புத்தகங்கள், அசைவூட்டம், வலைப்பூக்கள் தொடர்பு  போன்ற நிலைகளில் இணையம் வழியாகத் தமிழ் கற்பித்தல் நடைபெறுகின்றன. இச்சூழ்நிலையில் தமிழாசிரியருக்கு இணையம் பற்றிய முழுமையான தெளிவு நிலை அவசியமாகிறது. அமெரிக்கா, தென்ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா  போன்ற பல நாடுகளில் வசிக்கும் புலம் பெயர்ந்த தமிழர்கள் தமிழ்மொழி கற்கப் போதுமான வசதிகள் இல்லை. இச்சூழ்நிலையில் பல நாட்டினரும் தமிழ்மொழியினைக் கற்க இணையவழித் தமிழ்க் கல்வி அவசியமாகிறது.
தமிழ் பேசும் இந்தியநாடு, சிங்கப்பூர், மலேசியா, ஸ்ரீலங்கா போன்ற நாடுகளிலும் இணையவழி தமிழ்க்கல்வி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சவால்கள்
சுவாமி விவேகானந்தர் (1863 – 1902) வெறும் புத்தகம் படிப்பது மட்டும் படிப்பன்று குழந்தைகளின் உள்ளார்ந்த ஆற்றலைத் தானாக மலரச் செய்வதே கல்வி என்றார்.  இன்றைய நிலையில் தமிழ்மொழி கற்பித்தலில் ஆசிரியர் வெறும் மனப்பாட மந்திரத்தை உருவேற்றும் கருவிகளாக மாறியுள்ளனர். இதன்விளைவாக மாணவர்களின் படைப்பாற்றல் திறன் வெளிப்பாடு மிகவும் குறைந்து வருகிறது. இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையான பணம் ஈட்டுதலின் பொருட்டு அதற்குத் தேவையான பாடங்களைக்  கற்கும் மாணவர்கள் தமிழ் படிப்பதைச் சுமையாகக் கருதுகின்றனர். தமிழ் படிப்பது வெறும் பண்பாட்டினைப் போதிக்கும் ஏட்டளவுக் கல்வியாய் மாறி இருப்பதைக்  காரணமாகக் கருதலாம். இத்தகைய சூழ்நிலையில் கற்பித்தலில் தமிழாசிரியரின் கடமை மிகவும் இன்றியமையாததாகிறது.
மாணவர்களின் கவனத்தைத் திசை திருப்ப நவீன அறிவியல் சாதனங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் இவற்றினூடே பாடம் என்பது மாணவனுக்கு மிகவும் கடினமான கற்றல் முறையாகிறது. எனவே, அறிவியல் முறைகளுக்கேற்பத் தமிழாசிரியர்களும் அறிவியல் தொடர்பானவற்றை அறிந்து கொள்வது  அவசியமாகின்றது. எதையும் இணையம் வழி அறிந்து கொள்ளும் மாணவர் சமூகத்தினைத் தமிழ்ப்பண்பாட்டினை அறிந்து அதன்வழி தனது வாழ்க்கைப்பாதையினை அறிந்து கொள்ள இணையவழி தமிழ் கற்பித்தலும் அவசியமாகிறது.
இணையம் வாயிலாகக் கற்பித்தலின்போது
v  கணினியில் ஏற்படும் பிரச்சினைகள்
v  மென்பொருள் பற்றிய பயன்பாடு - அறியாமை
v  எழுத்துருப் பிரச்சினைகள்
v  அகராதிகளைத் தெளிவுறப் பார்க்கும் நேரமின்மை
போன்ற காரணங்களினால் இணையம் வழி - தமிழ் கற்பித்தல் நடைபெற சிக்கல்கள் ஏற்படுகின்றன.
கணினி பற்றிய போதிய தெளிவுபெற www.eegarai.net, velanblogspot.com போன்ற வலைத்தளங்களைப் பயன்படுத்தலாம்.
v  நழுவல் தயாரிப்புகள்
v  அசைவூட்டம்
v  ஒளி, ஒலி வடிவத் தயாரிப்புகளைத் தரவேற்றம் செய்யக் கற்றுக் கொள்ளுதல்
போன்றவற்றை ஆசிரியர்கள்  கற்பித்தல் திறனில்  வெளிப்படுத்துவதால் மாணவர்களின் கற்றல் திறன் அதிகரிக்கும்.
மாணவர்கள் எழுதுவதற்கான பயிற்சிமுறை கற்பிக்க
v  கலிஃபோர்னியப் பல்கலைக்கழகம்
போன்றவை சிறப்பான முறையில் இயங்கி வருகின்றன.

இன்றைய மாணவர்கள் வரைகலைப் பயிற்சியை அதிகமாக விரும்புகின்றனர். Coolpaint, Kea colouring setup, Drawing for children, kea colouring book 3.7.0, paintslate (BENDIGE DESIGN) போன்ற மென் பொருட்களின் வாயிலாகப் பலவித வடிவங்களில் பயிற்சித்தாள் உருவாக்கலாம். மாணவனையும் படைப்பாற்றல் திறன் நிறைந்த பயிற்சித்தாளினை உருவாக்கம் அளிக்கப் பயிற்சி அளிக்கலாம். ‘படைப்புச் செயல்களின் சிறந்த வெளிப்பாடே விளையாட்டு‘ எனக் கல்வியாளர் நன் (NUNN) குறிப்பிடுகிறார். அறிவியல் வளர்ச்சியின் வெளிப்பாடு தமிழ் மொழியில் வெளிப்படுமாயின் வகுப்பறையில் தமிழ்மொழியின் கற்றல்திறன் அதிகரிக்கும் என்பது இவ்வாய்வின் முடிவாகிறது.

2 கருத்துகள்: